Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/லிங்க வடிவ ரங்கநாதர்

லிங்க வடிவ ரங்கநாதர்

லிங்க வடிவ ரங்கநாதர்

லிங்க வடிவ ரங்கநாதர்

ADDED : பிப் 13, 2025 12:30 PM


Google News
Latest Tamil News
கோயம்புத்துார் மாவட்டம் காரமடையில் ரங்கநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவலிங்கம் போல சதுர வடிவில் ரங்கநாதர் காட்சி தருகிறார்.

திருமாலை மணக்கோலத்தில் காண இங்கு கருடாழ்வார் தவமிருந்தார். திருமாலும் காட்சியளிக்க, அந்த இடத்தில் சுயம்புவாக திருமால் எழுந்தருளினார். பின்னாளில் காரை மரங்கள் நிறைந்த காடாக இப்பகுதி இருந்தது. அங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று குறிப்பிட்ட இடத்தில் தினமும் பால் சொரிந்தது. தோண்டிய போது ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தில் சுயம்புவாக தான் இருப்பதை அசரீரியாகத் தெரிவித்தார் திருமால். அவருக்கு கோயில் கட்டப்பட்டது.

கருவறையில் மூலவர் சதுரபீடமாக இருக்கிறார். இவரை ரங்கநாதர், வெங்கடேசப்பெருமாள் என அழைக்கின்றனர். பிரம்ம, கருட தீர்த்தங்கள் உள்ளன. வேணுகோபாலர், சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. மூலவரை பார்த்தபடி அனுமன் உள்ளார். இவரது சிலையும் பெரிய சதுரக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு அருகிலுள்ள மலை மீது தாயார் சன்னதி உள்ளது. 'பெட்டத்தம்மன்' என அழைக்கின்றனர். மாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் மலைக்கோயிலில் உள்ள தாயாரை கும்பத்தில் எழுந்தருளச் செய்து அடிவாரக் கோயிலுக்கு கொண்டு வருவர். அதை கருவறையில் வைத்து பூஜை நடத்துவர். மறுநாள் அதிகாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். ரங்கநாதருக்கு வலது புறத்தில் ரங்கநாயகிக்கு பிற்காலத்தில் தனி சன்னதி கட்டப்பட்டது.

இங்கு வரும் பக்தர்களுக்கு சடாரி வைப்பதில்லை. ராம பாணத்தால் ஆசியளிக்கின்றனர். இதற்குள் திருமாலின் ஆயுதமான சக்கரம், ஆதிசேஷன் வடிவங்கள் உள்ளன. மாசிமகத்தன்று சுவாமி தேரில் எழுந்தருள்வார். தேர் நிலைக்கு வந்ததும், பக்தர்கள் தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவை கலந்த பிரசாதத்தை ஏந்தி, 'ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்,' எனச் சொல்லி ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர். இதற்கு 'கவாள சேவை' என்று பெயர்.

தேரோட்டத்தின் போது சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் 'தண்ணீர் சேவை', கையில் பந்தம் ஏந்திக் கொள்ளும் 'பந்த சேவையை' பக்தர்கள் வேண்டுதலாகச் செய்கின்றனர்.



எப்படி செல்வது: மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ.,

விசேஷ நாள் : ராமானுஜ ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாசிமக பிரம்மோற்ஸவம்

நேரம்: அதிகாலை 5:30 -- 1:00 மணி; மாலை 4:00 -- 9:00 மணி

தொடர்புக்கு: 04254 - 272 318

அருகிலுள்ள கோயில்: இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் 15 கி.மீ., (வெற்றிக்கு...)

நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 04254 - 254 994





      Our Apps Available On




      Dinamalar

      Follow us