Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/வந்தாள் வரலட்சுமியே!

வந்தாள் வரலட்சுமியே!

வந்தாள் வரலட்சுமியே!

வந்தாள் வரலட்சுமியே!

ADDED : ஆக 05, 2016 09:24 AM


Google News
Latest Tamil News
சிவபெருமானும், பார்வதிதேவியும் தேவகணங்கள் புடைசூழ சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர். ஆட்டம் முடியும் நேரத்தில் பார்வதிதேவி ஜெயிக்கும் நிலையில் இருந்தாள். அப்போது திடீரென சிவன் 'நான் ஜெயிச்சுட்டேன்' என எழுந்து விட்டார்.

“நான் தானே ஜெயிக்கப் போகிறேன், நீங்கள் ஆட்டம் முடியாத நிலையில் எழுந்தால் எப்படி?” என கோபித்தாள் பார்வதி.

உடனே சிவன் அருகில் இருந்த சித்ரநேமி என்ற கணதேவனிடம், “நீயே சொல்லப்பா! யார் ஜெயித்தது?” என்றார்.

சிவனுக்கு பாதகமாக சொல்லி, அவர் நெற்றிக்கண்ணை திறந்து விட்டால் என்னாவது? அம்மாவைக் கூட சமாளித்து விடலாம்,” என்ற எண்ணத்தில் சித்ரநேமி, “நீங்கள் தான் ஜெயித்தீர்கள்?” என்று நடுநிலை தவறி சொல்லி விட்டான்.

வந்ததே பார்வதிக்கு கோபம். நடுநிலை தவறி தீர்ப்பளிப்பவர்களுக்கு தொழுநோய் தான் வரும். இதோ! அந்தப் பரிசை இப்போதே அடைவாய்!”

என சாபமிட்டு விட்டாள் பார்வதி.

சிவன் அவளை சமாதானம் செய்து,“பார்வதி! ஆட்டத்தில் நீ தான் வென்றாய். நான் விளையாட்டுக்காக சொன்னதை பெரிதுபடுத்தி விட்டாயே! இந்த சித்ரநேமி பொய் என்பதே அறியாதவன். முதன் முதலாக எனக்காக பொய் சொல்லி விட்டான், சாபத்தை திரும்பப் பெறு,” என்றார்.

தாய்க்கே உரித்தான இரக்கம் மேம்பட, “சித்ரநேமி! இறைவனாகவே இருந்தாலும் தவறு செய்தால் நீதி தவறி தீர்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்தினேன். இருப்பினும் எல்லாம் நன்மைக்கே. நீ பூலோகத்தில் பிறக்க வேண்டும். அங்கே கங்கையும், யமுனையும் கூடும் நன்னாளான ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்துக் காத்திரு. அந்த நாளில் துங்கபத்ரா நதிக்கரைக்கு தேவலோகப் பெண்கள் வருவார்கள். அவர்கள் ஸ்ரீதேவியான லட்சுமிக்கு பூஜை செய்வார்கள். அந்த பூஜையில் நீயும் கலந்து கொண்டு அவளைத் தரிசிக்க வேண்டும். அவள் உனக்கு தொழுநோய் நீங்க வரம் அருள்வாள்,” என்று விமோசனம் தந்தாள்.

சித்ரநேமியும் துங்கபத்ரா நதிக்கரையில் அந்த நன்னாளுக்காக காத்திருந்தான். பார்வதிதேவி குறிப்பிட்ட அந்த நல்லநாளில், தேவலோகக் கன்னிகள் அங்கு வந்து லட்சுமி தாயாரைப் பூஜித்த காட்சியைக் கண்டான். அவனும் அந்த விரதத்தில் பங்கேற்றான்.

விரத முடிவில் ஒரு சுமங்கலி, பத்து வயதுக்குட்பட்ட ஒரு கன்னி, ஒரு அந்தணர், ஒரு துறவி, ஒரு பிரம்மச்சாரி ஆகியோருக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பினான். அந்தக்கணமே அவனது தொழுநோய் நீங்கியது, லட்சுமியாய் வந்தவள் தொழுநோய் நீக்க வரமருளியதால் 'வரலட்சுமி' என்னும் பெயர் பெற்றாள்.

நம் மீதும் கருணை சிந்தும் வரலட்சுமி தாயாரை வரவேற்க, நாமும் வரும் வெள்ளியன்று காத்திருப்போம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us