Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நன்றி சொல்லவே... வார்த்தை இல்லையே...

நன்றி சொல்லவே... வார்த்தை இல்லையே...

நன்றி சொல்லவே... வார்த்தை இல்லையே...

நன்றி சொல்லவே... வார்த்தை இல்லையே...

ADDED : அக் 14, 2016 04:22 PM


Google News
Latest Tamil News
ஒரு நடுத்தர வயது பெண்மணி காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க வந்தார். அன்று பெரியவர் மவுனவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். பெரியவரிடம் பேச முடியாததால், அவரால் தன் குறையைச் சொல்ல முடியவில்லை.

இப்படியே பத்து நாட்களாக தொடர்ந்து வந்தார் அந்தப்பெண். பதினோராம் நாளில் அந்த பெண் வருவதைக் கண்ட பெரியவர் உதவியாளரை அழைத்து, “இந்த பெண்ணுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை. உடனே அழைத்து வா” என்று கூறினார்.

அவர், “பெரியவா! என் பொண்ணை பெரிய இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். வைரத்தோடும், இரட்டை வடம் சங்கிலியும் சீதனம் தர சம்மதிச்சோம். ஆனால் முடியாமல் போனது. என் மகள் இப்போது மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ முடியலை” என்று கண்ணீர் சிந்தினார். அப்போது மடத்திற்கு ஒரு பணக்கார பெண் பெரியவரைத் தரிசிக்க வந்தார்.

அவரிடம் பெரியவர், “எனக்கு உடனே நீ ஒரு உதவி செய்தாகணும்,” என்றார். அவரும் பணிவாக, “பெரியவா... அப்படி நீங்க ஒரு அனுக்ரஹம் பண்ணினா அது நான் செய்த பாக்கியம்” என்றாள்.

“உடனடியா ஒரு வைரத்தோடும், இரட்டை வடம் சங்கிலியும் உன்னால் தர முடியுமா?” என்றார் பெரியவர்.

பணக்கார பெண்மணியும் தான் அணிந்திருந்த வைரத் தோட்டை கழற்ற முயன்றாள்.

“கொஞ்சம் பொறு. சுமங்கலி காதணி இல்லாமல் இருக்கவே கூடாது” என்று சொல்லி தடுத்ததோடு, மடத்தின் நிர்வாகி மூலமாக வைரத்தோடுக்கு மாற்றாக தங்கத்தோடு ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். பின் அந்தப் பெண்ணிடம், “வைரத்தோடு, இரட்டை சங்கிலி இரண்டையும் இந்த அம்மாவின் பொண்ணுக்கு சீதனமா கொடு. அவளை மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ வை” என்று சொல்லி நடந்த விபரத்தை எடுத்துச் சொன்னார். பணக்கார பெண்ணும் ஆபரணங்களைக் கொடுத்து உதவினார். பெண்ணின் தாயாருக்கு பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாறின. கண்களில் நீர்கோர்க்க பெரியவரிடமும், பணக்கார பெண்மணியிடமும் தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

சாந்தா சாயிதாசன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us