ADDED : அக் 14, 2016 04:23 PM

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகிலுள்ள பாஜீகம் என்ற ஊரில் பிறந்தவர் வாசுதேவன். இவர் சிறுவனாக இருந்த காலத்தில், ஒருநாள் பெற்றோருடன் உறவினர் திருமணத்திற்குச் சென்றார். அங்கு அவர் காணாமல் போகவே, பெற்றோர் தேடி அலைந்தனர்.இறுதியில் ஒரு கோவிலில் வழிபாடு செய்வதைக் கண்டு அதிர்ந்தனர். 'தனியாக இப்படி வரலாமா?' என்று கேட்டனர். அதற்கு சிறுவன், 'நான் தனியாக இல்லையே. என்னுடன் பகவான் இருப்பதால் எப்போதும் இனிமையாகவே இருக்கிறேன்,” என்று பதில் அளித்தார். பின், தன் 16ம் வயதில் சன்னியாசம் ஏற்று மத்வாச்சாரியார் எனப் பெயர் பெற்றார். துவைதம் என்னும் சித்தாந்தத்தை உலகிற்கு அளித்தார். இரு விரலை நீட்டியபடி காட்சி தரும் இவர் மக்கள்சேவை, மகேசன் சேவை இரண்டும் மனிதனுக்கு அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்.