Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

ADDED : பிப் 19, 2023 01:37 PM


Google News
Latest Tamil News
வறண்ட நதியில் சில நேரங்களில் வெள்ளம் வருவதுண்டு. இலையுதிர்ந்த மரங்களும் பருவம் வந்தவுடன் சுவையான பழங்கள் கொடுப்பதுண்டு. அதுபோல்தான் மனித வாழ்க்கையும். உலகில் நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவரும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவரும் இல்லை. எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை இருந்தாலும், கடவுள் நினைத்தால் அது காணாமல் போய்விடும். எப்படி?

ராமபிரான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தர் செல்வந்தர் ஒருவர். பணத்தில் மட்டும் அல்ல. குணத்திலும் செல்வந்தரே. ஸ்ரீராமநவமியன்று தன்னிடம் வேலை பார்க்கும் ஆயிரம் தொழிலாளர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவரே தன் கைகளால் உணவு பறிமாறியதோடு, ஆளுக்கு இரண்டு பெரிய கவர்களையும் வைத்தார். இதைப் பார்த்தவர்களுக்கு உணவு உள்ளே செல்லவில்லை. மாறாக பலவித சிந்தனைகள் மனதில் குவிந்தன. இவர்களது முகக்குறிப்பை அறிந்த செல்வந்தர் பேச ஆரம்பித்தார்.

'அன்பு நண்பர்களே! உங்களது உழைப்பினால், நான் இன்று செல்வந்தனாக உள்ளேன். இதுநாள் வரை உங்களது வேலைக்கு ஏற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே சம்பளம் கொடுத்துள்ளேன். எல்லாம் அந்த பெருமாளின் அருள்தான். எனவே அவர் கொடுத்ததை உங்களுக்கு கொடுத்து புண்ணியத்தை தேட விரும்புகிறேன். ஒரு கவரில் அவரது மகிமைகளை கூறும் ராமாயணத்தை வைத்துள்ளேன். மற்றொன்றில் பணம் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்.

அவ்வளவுதான்! மகாலட்சுமி வீட்டிற்கு வருகிறாள் என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள். அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை, தங்கைக்கு திருமணம், குழந்தைகளின் படிப்புச் செலவு என ஆளாளுக்கு ஒரு காரணத்தை கூறி பணத்தை எடுத்துக் கொண்டனர். ஒருவனைத் தவிர.

செல்வந்தரின் தோட்டத்தில் வேலை பார்க்கும் அவன் ஏழை. வயதான தாய், மனைவி, குழந்தைகள் என சிறிய குடும்பம். பணத்தின் தேவையையும் உணர்ந்தவன். இருந்தாலும் ராமாயண புத்தகத்தை எடுத்தான். அருகில் இருந்தோர், 'என்னப்பா இவன். பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறானே' என நினைத்தனர். செல்வந்தரோ ஆச்சர்யத்துடன் நின்றார்.

''ஐயா! நான் செய்யும் வேலைக்கு நிறைவான சம்பளத்தை கொடுக்கிறீர்கள். இந்தப் பரிசு நீங்கள் உன்னதமான மனிதர் என்பதை காட்டுகிறது. அதோடு இதை நான் எடுத்தால், இத்தனை நாளாக சம்பளம் வாங்கியதற்கு அர்த்தமே இல்லை. மேலும் எனது அம்மா, 'ஏழ்மை என்பதும் கடவுளால் அருளப்பட்டதே. அதில் ஒரு காரணம் இருக்கும்' எனக் கூறுவார். அதோடு அவர் காலையில் ராமாயணம், மாலையில் மகாபாரதம் படித்தும் அர்த்தம் சொல்வார். பழைய புத்தகம் என்பதால் அது தற்போது கிழிந்துவிட்டது. நீங்கள் கொடுத்ததை அம்மாவிடம் காட்டினால் மிகவும் சந்தோஷப்படுவர்'' என நன்றி கூறி, அந்த கவரை எடுத்தான்.

அதை பிரித்து பார்த்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. அதில் ராமாயண புத்தகத்தோடு, செல்வந்தரின் சொத்தின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரமும் இருந்தது. யாருக்கு என்ற பெயர் மட்டும் அதில் இல்லை.

கஷ்டத்திலும் நேர்மையாக இருந்தால், கடவுள் நிச்சயம் உதவி செய்வார் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us