Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/இதல்லவா... குருபக்தி

இதல்லவா... குருபக்தி

இதல்லவா... குருபக்தி

இதல்லவா... குருபக்தி

ADDED : ஜன 30, 2025 01:37 PM


Google News
Latest Tamil News
ஜன.31 - அப்பூதியடிகள் குருபூஜை

சோழ நாட்டில் வளம் மிக்க ஊர் திங்களூர். இங்கு அந்தணர் மரபில் பிறந்தவர் அப்பூதி அடிகள். எந்த தீயபண்புகளும் இல்லாதவர். சிவன் அடியார்களுக்கு தொண்டு செய்வதை குறிக்கோளாக கொண்டவர். அதிலும் ஒருமுறை கூட பார்க்காத திருநாவுக்கரசரைத் தன் குருநாதராக எண்ணி வாழ்ந்தார். தான் நடத்தி வந்த தண்ணீர் பந்தல், தர்ம சத்திரம் என அனைத்திற்கும் அவரின் பெயரையே சூட்டியிருந்தார்.

தன் குழந்தைகளுக்கும் மூத்த, இளைய திருநாவுக்கரசு என்றே பெயரும் சூட்டினார். ஒருநாள் அவ்வூருக்கு வந்த சிவபக்தர் ஒருவர் அப்பூதியடிகளின் தண்ணீர்ப்பந்தலைக் கண்டு வியந்தார். பின் அவரது வீட்டுக்குச் சென்றார். அன்போடு உபசரித்த அப்பூதியடிகளிடம், 'நீங்கள் ஏன் திருநாவுக்கரசு என எல்லாவற்றிற்கும் பெயர் சூட்டியிருக்கிறீர்கள்' எனக் கேட்டார்.

'சிவபக்தரான நீங்களே இப்படி கேட்கலாமா' எனக் கேட்டதோடு, அவரின் பெருமைகளை விளக்கினார். உடனே சிவபக்தர், 'தாங்கள் கூறிய நாவுக்கரசு என்னும் அந்த சிறியவன் நானே' என்றார். அப்பூதி அடிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக அவரை வணங்கினார். மனைவி, மகன்களும் ஆசி பெற்றனர். பிறகு சாப்பாடு தயாராகத் தொடங்கியது.

அதற்குள் திருநாவுக்கரசர் சிவதரிசனம் செய்ய கோயிலுக்கு புறப்பட்டார். அவர் வருவதற்குள் அப்பூதி அடிகளின் மூத்த மகன் வாழை இலை பறித்து வர தோட்டத்துக்கு சென்றான். அப்போது பாம்பு ஒன்று தீண்ட அவன் உயிர் நீத்தான். திருநாவுக்கரசர் வருவதற்குள் இறந்த சிறுவனை பாயில் சுருட்டி அப்பூதியடிகள் மறைத்து வைத்தார். சோகத்தை அடக்கி மகிழ்ச்சியை வரவழைத்தபடி உணவு பரிமாறினார்.

முகக்குறிப்பை அறிந்த அவர், 'உம் மூத்த மகன் எங்கே' எனக் கேட்டார். 'அவன் உதவ மாட்டான்' எனத் தெரிவித்தார். சந்தேகம் அடைந்த அவர் உண்மையைச் சொல்லும்படி வேண்டினார். அப்பூதியடிகள் நடந்ததைச் சொல்ல, 'என்ன காரியம் செய்தீர்கள்? உடனே சிறுவனின் உடலை எடுத்துக் கொண்டு சிவன் கோயிலுக்கு வாருங்கள்' என ஓடினார் திருநாவுக்கரசர்.

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

என்னும் பதிகத்தை பாடினார் திருநாவுக்கரசர். என்ன ஆச்சர்யம். சிவனருளால் சிறுவன் எழுந்தான். அதிசயத்தைக் கண்ட ஊர் மக்கள் மெய் மறந்தனர். குரு பக்தி கொண்ட அப்பூதியடிகளின் குருபூஜை தை மாத சதயம் நட்சத்திரமான இன்று (ஜன.31) சிவன் கோயில்களில் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us