Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தாயுள்ளம் கொண்ட தவமுனிவர்

தாயுள்ளம் கொண்ட தவமுனிவர்

தாயுள்ளம் கொண்ட தவமுனிவர்

தாயுள்ளம் கொண்ட தவமுனிவர்

ADDED : மார் 14, 2023 12:26 PM


Google News
Latest Tamil News
1939ல் காசி, ராமேஸ்வரம் யாத்திரையை முடித்த மஹாபெரியவர், கும்பகோணம் சங்கர மடத்தில் வியாச பூஜைக்காக மூன்று மாதம் தங்கியிருந்தார். சுவாமிகள் நடத்தும் சந்திர மவுலீஸ்வர பூஜையை தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதை நடத்துவதற்கு குழு ஒன்று இருந்தது. அவர்கள் வெளியூர்களுக்கு சென்று முக்கிய பிரமுகர்களிடம் நன்கொடை வசூலித்து அன்னதானத்தை நடத்தினர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கவே பணம், பணியாட்கள் போதவில்லை. உடனே அக்குழுவினர் மாதத்திற்கு இரண்டு முறை வரும் ஏகாதசியன்று விரதம் இருக்க வேண்டும் என்னும் விதியின் அடிப்படையில் அன்னதானத்தை நிறுத்த முடிவு செய்தனர்.

அப்படி செய்தால் பணநெருக்கடியும், பணியாட்களுக்கு ஓய்வும் கிடைக்கும் என மஹாபெரியவரிடம் தெரிவித்தனர். அவரோ புத்தகம் ஒன்றை எடுத்து வரச் சொன்னார். அதில் அன்னதானம் நடத்துவதற்காக மன்னர்கள் வழங்கிய சாசனம்,

பட்டயம் பற்றிய குறிப்புகள் இருந்தன. தினமும் தர்மம் செய்ய வேண்டும் என நன்கொடை பெற்றுள்ளதால் அன்னதானத்தை நிறுத்தக் கூடாது, விரதம் மேற்கொள்ளாத ஏழைகள் எங்கு செல்வர்'' என்று சொல்லி அன்னதானத்தை தொடர வேண்டும் என விளக்கினார். நெருக்கடியை போக்கும் விதமாக செல்வந்தர் ஒருவர் மூலம் லாரிகளில் அரிசி மூடைகளை மடத்திற்கு வரவழைத்தார். அதன்பின் அன்னதானம் தொய்வு இல்லாமல் நடந்தது. மஹாபெரியவரின் தாயுள்ளத்திற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com




      Our Apps Available On




      Dinamalar

      Follow us