Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மனதை மாற்றிய பார்வை

மனதை மாற்றிய பார்வை

மனதை மாற்றிய பார்வை

மனதை மாற்றிய பார்வை

ADDED : ஏப் 06, 2023 08:41 AM


Google News
Latest Tamil News
காஞ்சி மஹாபெரியவரின் சீடர் இன்ஜினியர் முத்துசாமி அய்யர். ஆந்திர மாநிலம் கர்னுாலைச் சேர்ந்த இவரிடம், அங்குள்ள மடத்தில் ஆதிசங்கரரின் திருப்பாதங்களை பிரதிஷ்டை செய்யும்படி தெரிவித்தார் மஹாபெரியவர். பணியை நிறைவேற்றிய முத்துசாமி, அங்கு எடுத்த புகைப்படத்துடன் காஞ்சிபுரம் வந்தார். சென்னையிலுள்ள நண்பரின் வீட்டில் தங்கிய போது, ''வழக்கம் போல காஞ்சி மடத்திற்கு போகணுமா'' எனக் கேலி செய்தார் நண்பர். ஆனால் அந்த நண்பர் ஒருமுறை கூட மஹாபெரியவரை தரிசித்ததில்லை.

''ஆமாம். சுவாமிகளை தரிசிக்கத் தான் வந்தேன். தற்போது பூந்தமல்லியில் முகாமிட்டுள்ளார். நீயும் என்னுடன் வருகிறாயா'' எனக் கேட்டார். நண்பரோ தயக்கமுடன் அமைதியாக நின்றார்.

''வெளிநாட்டு பிரபலங்கள் சென்னைக்கு வந்தால் வெயில், மழை பாராமல் மணிக்கணக்காக காத்திருந்து பார்க்கிறாயே... சங்கராச்சாரியார், மஹான், அவதார புருஷர் என்றெல்லாம் பக்தர்கள் மஹாபெரியவரை கொண்டாடுகிறார்களே... உனக்கு மட்டும் அவர் மீது ஈடுபாடு இல்லையே ஏன்?'' எனக் கேட்டார். உடனே

நண்பர், ''சரி... உன்னுடன் நானும் வருகிறேன்'' என்றார்.

இருவரும் நீராடியபின் பாரம்பரிய உடைகளை அணிந்தபடி பூந்தமல்லி முகாமிற்கு புறப்பட்டனர். அங்கு நித்ய பூஜைகளை முடித்து விட்டு சுவாமிகள் குடிலுக்குள் தங்கியிருந்தார். பூஜை மண்டபத்தில் நண்பரை அமரச் சொல்லிவிட்டு தான் மட்டும் சென்று சுவாமிகளிடம் புகைப்படங்களை கொடுத்த போது, ''திருப்பணி சிறப்பாக நடந்ததாக கேள்விப்பட்டேன்'' என்றபடியே படங்களைப் பார்த்தார் மஹாபெரியவர்.

''மடம் பற்றிய ஆன்மிக ஞானம் இல்லாத என்னிடம் இந்த திருப்பணியை கொடுத்தீர்கள். தங்களின் ஆசியால் நானும் அதை நிறைவேற்றி முடித்தேன். இந்த பணியில் குறைகள் இருப்பின் என்னை மன்னியுங்கள்'' என்றார் முத்துசாமி. 'குறையொன்றுமில்லை' என ஆசியளித்த மஹாபெரியவர் குடிலில் இருந்து பூஜை மண்டபத்திற்கு புறப்பட்டார். அங்கிருந்த நண்பரை, சுவாமிகளிடம் அறிமுகப்படுத்தினார் முத்துசாமி. அவரும் பிரசாதம் பெற்றுக் கொண்டார்.

'என்ன... இனி நாம் வீட்டுக்கு கிளம்புவோமா'' எனக் கேட்டார் முத்துசாமி. '' இனி இரவு பூஜை நடக்க இருக்கிறதே. அப்போது சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு மெல்ல கிளம்பலாம்'' என்றார் நண்பர். ''இது என்ன அதிசயம். வழக்கம் போல மடத்திற்கு போகிறாயா என இன்று காலையில் கேலி செய்தாய். என்னுடன் இங்கு வருவதா வேண்டாமா என தயங்கினாய். இப்போதோ மெதுவாகக் கிளம்பலாம் என்கிறாயே! மஹாபெரியவரின் கனிந்த பார்வை, பக்தர்களை ஆட்கொள்ளும் விதம் தான் உன் மனமாற்றத்திற்கு காரணம்'' என நெகிழ்ந்தார் முத்துசாமி.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us