Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : பிப் 03, 2015 11:41 AM


Google News
Latest Tamil News
* மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் சிவன் காட்சியளித்தார் என்கிறார்களே. இந்த காலத்தில் ஏன் அத்தகைய காட்சி நமக்கு கிடைக்கவில்லை?

எம். எஸ். சுப்புலட்சுமி, மதுரை

காட்சி கொடுக்க சுவாமி தயாராகவே இருக்கிறார். ஆனால், மாணிக்கவாசகர் போன்ற அடியவர்கள் தான் இன்றில்லை. அவர் பாண்டிய மன்னரிடம் அமைச்சராக இருந்தபோது, குதிரை வாங்க பணம் கொடுத்து அனுப்பினான். சிவனையே சிந்தித்த அவருக்கு ஆவுடையார்கோவில் குருந்த மரத்தடியில் காட்சியளித்து உபதேசம் செய்தார். குதிரை வாங்க வேண்டிய பணத்தில் கோயிலைக் கட்டினார் மாணிக்கவாசகர். இதனால், மன்னனின் கோபத்திற்கு ஆளாகி பல துன்பங்களை அடைந்தார். அப்போதும் மனம் சிவபக்தியிலேயே ஈடுபட்டது. இவரது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம், நன்மையிலும், தீமையிலும் மனம் தளராத பக்தி வேண்டும் என்பது தான். இப்போது கேட்டது கிடைக்கவில்லை என்றாலே, நாம் சுவாமியிடம் கோபித்துக் கொள்கிறோமே!

* தெரிந்தே செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் இருந்தால் சொல்லுங்கள்.

பொன். எத்திராஜன், திருக்கழுக்குன்றம்

கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சி தின்றால் செரிமானமாகி விடுமா என்பது போல உள்ளது உங்களின் கேள்வி. தவறு என்று தெரிந்தும் செய்யத் துணிந்த மனம், அதில் ஈடுபட்ட பின், அதை நினைத்து வருந்துவது என்பது இழுக்கானது என்கிறார் திருவள்ளுவர். மேலும் தெரிந்து செய்யும் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் உண்டு என்று சொல்லி விட்டால் மனதில் துணிவு அதிகரித்து விடும். 'இனிமேல் தவறு செய்ய மாட்டேன். இந்த முறை மன்னித்து விடு இறைவா!' என்று கேட்பது ஒன்றே தகுந்த பிராயச்சித்தம். சொன்னது போல் தவறு செய்யாமல் நடந்து கொண்டால் தான் பாவமன்னிப்பு கிடைக்கும்.

* முன்ஜென்ம பாவ புண்ணியத்தை எப்படி ஒருவர் அறிந்து கொள்வது?

ச. ஜெயவேல், தாழம்பேடு

நமக்கு அமைந்திருக்கும் வாழ்க்கையே முன் ஜென்ம பாவ, புண்ணியத்தை உணர்த்தி விடும். புண்ணிய பலம் அதிகம் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பாவம் அதிகமாகி விட்டால் வாழ்வு துன்பமயமாகி விடும். துன்பத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சியைப் பெற ஆலயவழிபாடும், நாயன்மார்கள் பாடிய திருமுறைகள், ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பக்தியுடன் ஓதி வர வேண்டும்.

* கடன் தொல்லை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?

வி.பாலாஜி, மோச்சேரி

தேவைக்கு வாங்கும் போது தொல்லையாகத் தெரியாதது செலவழித்து மகிழ்ந்த பிறகு தொல்லையாகத் தெரிகிறதா? கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் கொடுங்கள். செவ்வாயன்று முருகப்பெருமானுக்கும், நவக்கிரக மண்டபத்திலுள்ள செவ்வாய்க்கும் சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். கடனை அடைக்க தேவையான பணம் கிடைக்கும்.

* கடல் ஸ்நானம், நதி ஸ்நானம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

கே.எஸ். அதிதி, சென்னை

எல்லா நதிகளும் சமுத்திரத்திலேயே கலக்கின்றன. எனவே, சமுத்திர ஸ்நானம் மிக உயர்ந்தது. அதுவும் அமாவாசை, பவுர்ணமி, கிரகணம் போன்ற புண்ணிய காலங்களில் சமுத்திரத்தில் நீராடுவது சிறப்பு. நதிகளின் நீர் கலப்பதனால் சமுத்திரம் புனிதமாகிறது. அதனால் நதியில் நீராடுவதும் புண்ணியமானது தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us