Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஜன 20, 2015 04:06 PM


Google News
Latest Tamil News
**கோயிலில் மின் இயந்திர மேளம் முழங்க பூஜை நடத்துவதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?

அ.யாழினி பர்வதம், சென்னை

மின்சார உபயோகங்களைப் பற்றி அதாவது மின்விளக்கு உட்பட அனைத்தையும் சாஸ்திரத்தில் காண முடியாது. எண்ணெய் தீபங்கள், மற்றும் அந்தக்கால வாத்தியங்கள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளது. மின் விளக்குகளை வழக்கத்தில் ஏற்றுக் கொண்டது போல, மின் இயந்திர வாத்தியக்கருவிகளையும் ஏற்பதில் தவறில்லை. அந்தக்காலத்தில் பயன்படுத்திய தோல்கருவி வாத்தியங்கள் பல இன்று கிடைக்கவும் இல்லை. வாசிப்பவர்களும் குறைவாகவே உள்ளனர். இதற்கு மாற்றாக மின் இயந்திரமேளம் இருக்கிறது. வாத்தியம் இல்லாத குறையை, இதாவது போக்குகிறதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

* சுவாமி தரிசனம் செய்ய வெறுங்கையுடன் செல்வது சரியா?

வே.ராமசாமி, மடத்துக்குளம்

குழந்தை, குருநாதர், தெய்வம் இந்த மூன்றையும் வெறும் கையுடன் செல்வது, தரிசிப்பது கூடாது. இயன்ற வரையில் பழங்களையாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். எனவே, சுவாமி தரிசனத்திற்குச் செல்லும் போது குறைந்த பட்சம் விளக்கேற்ற கொஞ்சம் எண்ணெய், கதம்பம், உதிரிப்பூ, ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்.

*மணமான பெண்கள் உச்சந்தலையில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

டி.ஜெயா, முகப்பேர்

பெண்களின் உச்சி வகிடிற்கு சீமந்தம் என்று பெயர். திருமணமான பின் உச்சந்தலை, நெற்றி, கழுத்தில் திருமாங்கல்யம் ஆகிய மூன்றிடத்திலும் குங்குமத்தை திலகமாக இட வேண்டும். இதனால், வாழ்வில் சர்வ மங்களமும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் உண்டாகும்.

* பழைய கோயில்களைப் புதுப்பிப்பதும், புதிய கோயில்களைக் கட்டுவதற்கும் பலன் ஒன்று தானா?

வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயில்

பழைய கோயில்கள் கவனிப்பாரற்று பாழடைந்து பூஜை இல்லாத நிலையில், புதிய கோயில்களைக் கட்டினால் எப்படி பலன் கிடைக்கும்? புதிய கோயில் கட்டினாலும் புண்ணியம் தான் என்றாலும், பழைய கோயில்களைப் புதுப்பித்து நின்று போன பூஜைகளை முறையாக மீண்டும் நடத்திட முயற்சிப்பதே மேலான புண்ணியம்.

* தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால் செலவு அதிகரிக்கும் என்பது ஏன்?

கே.மகேஸ்வரி, மதுரை

சில விஷயங்கள் பெரியவர்கள் கூறியதாக காலம் காலமாக வழக்கில் இருக்கின்றன. சாஸ்திர ரீதியாக இவற்றிற்கு பதில் கிடைக்காவிட்டாலும், அனுபவ ரீதியாக பலன் அளிப்பவையாகவே உள்ளன. இன்றைய சூழலில் பணத்தை விட தண்ணீர் கிடைப்பது அரிதான விஷயமாகி விட்டதால், 'பணத்தை தண்ணீராக செலவழிக்காதே' என்று சொல்வது போய், இப்போது 'தண்ணீரைப் பணமாக செலவழிக்காதே' என்று சொல்வது வழக்கில் வந்து விடும் போல தோன்றுகிறது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us