Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/விசுவாசத்தின் தந்தை

விசுவாசத்தின் தந்தை

விசுவாசத்தின் தந்தை

விசுவாசத்தின் தந்தை

ADDED : ஜன 08, 2021 03:39 PM


Google News
Latest Tamil News
குழந்தைக்காக ஏங்கும் நுாறு வயதுள்ள ஒருவருக்கு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்? அந்தக் குழந்தையை கொஞ்சுவார். தரையில் விடாமல் கையிலேயே தாங்கி பிடிப்பார். வாழ்வே குழந்தையை மையமிட்டுத் தானே இருக்கும்? ஆபிரகாம், சாரா தம்பதிக்கும் அப்படித் தான்...இவர்களின் குழந்தை ஈசாக். குழந்தை பிறந்த போது கணவருக்கு வயது 100. மனைவிக்கு வயது 90.

இளைஞனாக ஈசாக் வளர்ந்த போது ஒருநாள், ''ஆபிரகாம்! உன் அன்பு மகனை மோரியா நிலப்பகுதியிலுள்ள மலைக்கு வந்து எனக்கு பலியாகச் செலுத்து'' என ஆண்டவரின் கட்டளை பிறந்தது. நுாறாண்டு வாழ்வின் பயனாக கிடைத்த வாரிசை பலியிடுவதா என்ற வருத்தம் ஏற்பட்டாலும் அவர் மறுக்கவில்லை. மறுநாள் அதிகாலை ஈசாக்கையும், பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். மூன்று நாட்கள் கழுதையில் பயணித்தனர்.

'' தந்தையே... விறகு, கத்தி, நெருப்பு எல்லாம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் பலியிட ஒரு ஆட்டுக்குட்டி இல்லையே?'' எனக் கேட்டான் ஈசாக்கு.

''ஆண்டவர் தருவார்'' என்றார் ஆபிரகாம்.

மலையடிவாரத்தை அடைந்ததும் பணியாளர்களிடம், “கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், ஈசாக்கும் மலை மீதேறிச் செல்கிறோம். பலி முடிந்ததும் இருவரும் திரும்பி வருகிறோம்'' என்றார் ஆபிரகாம் நம்பிக்கையுடன்.

மலையுச்சிக்கு போனதும் மகனை விறகின் மீது கிடத்தினார் ஆபிரகாம். மகனைக் கொன்று நெருப்பில் சுட்டால் பலி நிறைவேறி விடும். அதற்காக அவனை வெட்ட கத்தியை எடுத்த போது, ''ஆபிரகாம்! நீ ஆண்டவருக்கு பயப்படுபவன் என்பது தெரிந்து விட்டது. உன் மகன் மீது வைத்துள்ள கத்தியை எடு'' எனக் குரல் ஒலித்தது. மகிழ்ச்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்த போது அருகிலுள்ள முட்புதரில் கொம்பு சிக்கியபடி ஆட்டுக்குட்டி ஒன்று நிற்பதைக் கண்டார். அதையே வெட்டி பலி கொடுத்தார். தன் மகன் உயிர் பிழைப்பான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன், 'பலி முடிந்ததும் இருவரும் திரும்புவோம்' என பணியாளர்களிடம் ஏற்கனவே ஆபிரகாம் தெரிவித்தார். அதனாலேயே ''விசுவாசத்தின் தந்தை'' எனப் புகழப்படுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us