Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/மினசோட்டாவில் இராசேந்திரச் சோழன் நவீன நாடகம்

மினசோட்டாவில் இராசேந்திரச் சோழன் நவீன நாடகம்

மினசோட்டாவில் இராசேந்திரச் சோழன் நவீன நாடகம்

மினசோட்டாவில் இராசேந்திரச் சோழன் நவீன நாடகம்

பிப் 20, 2025


Google News
Latest Tamil News
அமெரிக்கா, மினசோட்டாவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், நடத்திய சங்கமம் பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக மாவீரன் இராசேந்திரச் சோழன் என்ற வரலாற்று நாடகத்தை மேடையேற்றியது. எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் என்ற நாவலைக் கொண்டு, பேராசிரியர் முனைவர் ராஜு எழுத்து, இயக்கத்தில் நவீன நாடகமாக வடிவமைத்திருந்தார்.

இந் நாடகத்தில், இராசேந்திரச் சோழனுக்கு குடும்பச் சூழலின் காரணமாக காலம் தாழ்த்தி இளவரசனாக முடிசூட்டப்பட்டதும், தந்தையின் பெருமையின் நிழலில் இருந்து அவர் விடுபட, தலைநகரமான தஞ்சையில் இருந்து புதிய தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியபின்னும், ஏற்பட்ட மனப்போராட்டத்தையும் மையப்படுத்தி அனைத்து கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது.



சுமார் 4 மாதங்களாக வசன உச்சரிப்பு, ஏற்ற இறக்கம், காட்சியின் தன்மை என்று அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இணைய வழியில், முனைவர் இராஜுவுடன் பயிற்சியைத் தொடங்கினோம். மேலும் உடல் மொழியில், உணர்வுகளைக் கொண்டு வரும் விதமாக 1 மாத நேரடிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.



இந் நாடகத்திற்கான உடை, அலங்காரப்பொருட்கள் தமிழகத்தில் இருந்து வாங்கியிருந்தோம். நிகழ்ச்சி நடத்தும் அரங்கில் கொடுக்கப்படும் பெரும்பாலான பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டோம். 8 அடி உயரமுடைய 6 தூண்களை நாங்களே தயாரித்தோம். ஒலி, ஒளி அமைப்பு, இதில் முக்கிய பங்காற்றும் விதமாக சில நுட்பமான உத்திகளைக் கொண்டு உருவாக்கினோம். மிகப்பிரமாண்டமான 18 காட்சிகளுடனும், பரதம், நாட்டுப்புற நடனம் என 5 பாடல்களுடனும் சுமார் 1 மணி 30 நிமிடத்திற்குப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது என்று சொன்னால் மிகையில்லை.



நாடகத்தில் நடித்த, நடனமிட்ட அனைவரும் மினசோட்டாவாழ் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே. அவர்களுக்கும், தொழில் நுட்ப உதவி செய்த அனைவருக்கும், நாடகத்தினை ஒருங்கிணைக்க உதவிய சிவானந்தம், சுந்தரமூர்த்தி, செந்தில்குமார், ப்ரியா, சச்சிதானந்தன், வேல்முருகன் ஆகியோர்க்கு நன்றி.



உலகின் பெரும் பகுதியை கட்டி ஆண்டு, புலிக்கொடியைப் பறக்கவிட்டு, தமிழர்களின் புகழை உலகறியச் செய்த இராசேந்திரச் சோழனின் வரலாற்றை, நாடகமாகவோ, அல்லது திரைப்படமாகவோ இதுவரை யாவரும் சாத்தியப்படுத்தியதில்லை. அதுவும் நவீன நாடக வடிவில் முதல் முறையாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மேடையேற்றியது, என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. சுமார் 50 பேர் பங்கு கொண்ட பிரமாண்டமான இப்படி ஒரு வரலாற்று நாடகத்தினை, விலையில்லா நுழைவுச் சீட்டுடன் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு, மினசோட்டாத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வாழ்த்துகளையும், அனைத்து பார்வையாளர்கள், விருந்தினர்களின் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.



- தினமலர் வாசகர் சுந்தரமூர்த்தி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us