Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/தமிழ் கல்விக்கு உதவும் அமெரிக்கா மென் பொருள் பொறியாளர்-_ எழுத்தாளர்

தமிழ் கல்விக்கு உதவும் அமெரிக்கா மென் பொருள் பொறியாளர்-_ எழுத்தாளர்

தமிழ் கல்விக்கு உதவும் அமெரிக்கா மென் பொருள் பொறியாளர்-_ எழுத்தாளர்

தமிழ் கல்விக்கு உதவும் அமெரிக்கா மென் பொருள் பொறியாளர்-_ எழுத்தாளர்

நவ 24, 2024


Google News
Latest Tamil News
தமிழில் வெளிவரும் அனைத்து முன்னணி வார, மாத இதழ்களிலும் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதி நன்கு அறியப்பட்ட எழுத்தாளரான சத்யராஜ்குமார் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகி விட்டன.

மென்பொருள் துறையில் நிபுணராகப் பணியாற்றும் இவர் தொழில்நுட்பமும், கலையும் இணையும் புள்ளியில் இருக்க விரும்பி ஏஐ உட்பட பல கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 'அஜூபா - The Unique' என்னும் இருபது நிமிட காமிக் புத்தக ஸ்டைல் படத்தைத் தற்சமயம் தயாரித்து அது வெளியாக தயாராக இருக்கிறது.



பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் ரசிகராக இவரும் கிரைம், சயன்ஸ் பாணியில் எழுத ஆரம்பித்தார். பின்னர் கல்கி, கலைமகள், அமுதசுரபி போன்ற இதழ்களில் சமூக அக்கறையுள்ள பல சமூகக்கதைகளையும் எழுதி பரிசு பெற்றிருக்கிறார்.



கல்கியில் இவர் எழுதிய 'ஒரு விநாடியும் ஒரு யுகமும்' என்னும் சிறுகதை இலக்கிய சிந்தனை அமைப்பின் பொன் விழா ஆண்டில் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.



2000 ஆண்டு வாக்கில் பணி நிமித்தமாக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர் தற்சமயம் வாஷிங்டன் டி.சி பகுதியில் வர்ஜீனியா மாநிலத்தில் மனைவி கவிதா, மகன் அகில், மகள் தென்றல் ஆகியோருடன் வசித்து வருகிறார்.



அமெரிக்கவாழ் தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கையைக் களமாகக் கொண்டு பல சிறுகதைகளும், குறுந்தொடர்களும் அங்கிருந்து கொண்டே பிரபல வார இதழ்களில் எழுதியுள்ளார். அச்சிறுகதைகள் 'நியூயார்க் நகரம்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு அகநி வெளியீடாக வந்திருக்கிறது. அமேசான் கிண்டிலிலும் உள்ளது.



சமூக வலைதளம் இன்று நட்புக்கு வலு சேர்க்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு எழுத்தாளர் என். சி. மோகன்தாசை அமெரிக்காவிலேயே சந்திக்க முடிந்தது எல்லாம் ஃபேஸ்புக்கின் கருணையே என்கிறார்.



'வாஷிங்டன் டி.சி பகுதியில் உள்ள வள்ளுவன் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற திருக்குறள் போட்டிக்கு 2008 ல் நடுவராக இவரை அழைத்திருந்தார்கள். நண்பர் வேல்முருகன் இதைத் துவங்கி நடத்தி வரும் இது முழுக்க தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது.



இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வார இறுதிகளில் தமிழ் கற்றுத் தருவதைப் பற்றியும் அப்போதுதான் அறிந்து அலுவல் பணிக்குப் பின் எழுத்துப் பணியையும் மேற்கொள்ளுவதால் அது முடியாமல் போய்க் கொண்டிருக்க, மனைவி கவிதா அங்கே தமிழாசிரியையாக தனது சேவையை அளித்து வருகிறார்.



அப்பள்ளி தமிழ் கற்றுத் தருவது மட்டுமல்லாமல் தமிழுக்கு அங்கிருக்கும் அமெரிக்க பள்ளிகளில் செகண்ட் லாங்வேஜ் அந்தஸ்து வாங்கித் தந்திருக்கிறது, பொங்கல் பண்டிகையை வர்ஜீனியா மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட விழாவாக ஆக்கியிருக்கிறது. இங்குள்ள ஒரு தெருவுக்கு வள்ளுவன் பாதை என்று பெயரிட முயற்சி எடுத்து வெற்றி கண்டுள்ளது.



அமெரிக்க அரசு நூலகங்களில் தமிழ்ப் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது இப்படிப் பலப்பல முன்னெடுப்புகள். இதற்கு சத்யா பாஸ்கர் குமார் போன்ற நண்பர்களின் கடும் முயற்சிகளுக்கும், வெற்றிக்கும் ஆதரவு அளித்து வருகிறார்.



2016ல் நடிகர் நாசரின் இளைய மகனும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்து வெளிவந்த 'பறந்து செல்ல வா' என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி சினிமா உலகிலும் தடம் பதித்துள்ளார்.



அதன் பின் எழுந்த சினிமா ஆர்வம் காரணமாக சில குறும்படங்களையும் எழுதி, இயக்கியுள்ளார். அப்படி இவர் எழுதி இயக்கிய 'Sorry - வருந்துகிறோம்' என்னும் குறும்படத்திற்காக கனடாவில் நடைபெறும் டொரண்டோ தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த சமூகக் கருத்தை வலியுறுத்தும் இயக்குநர் (Best Social Message Director) என்ற விருதை அள்ளியுள்ளார்.



-_ அபர்ணா பிரசன்னம் with NCM







      Our Apps Available On




      Dinamalar

      Follow us