Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/புதிய குற்றவியல் சட்டங்கள்: நீதியை நிலைநாட்டுவது அவசியம்

புதிய குற்றவியல் சட்டங்கள்: நீதியை நிலைநாட்டுவது அவசியம்

புதிய குற்றவியல் சட்டங்கள்: நீதியை நிலைநாட்டுவது அவசியம்

புதிய குற்றவியல் சட்டங்கள்: நீதியை நிலைநாட்டுவது அவசியம்

PUBLISHED ON : ஜன 01, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இவற்றின்படியே, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தச் சட்டங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்ததை அடுத்து, அவற்றுக்கு மாற்றாக, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இதுதொடர்பான சட்ட மசோதாக்கள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. நிலைக்குழு சில திருத்தங்களை பரிந்துரை செய்தது. இதையடுத்து, நிலைக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் கூடிய புதிய சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.

அந்த மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும், கடந்த மாதம், ௨௦ம் தேதி லோக்சபாவிலும், மறுநாளான, ௨௧ம் தேதி ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆளுங்கட்சி எம்.பி.,க்களின் ஆதரவோடு, இந்தச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தச் சட்டங்கள் குற்றவியல் நீதி அமைப்பை சரி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அத்துடன் காலனி ஆதிக்க கால குறியீடுகளை மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என்றால் மிகையில்லை.

முந்தைய இந்திய தண்டனை சட்டங்களில், பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படாமல் இருந்தது. புதிய நியாய சன்ஹிதா சட்டத்தில், அதற்கு விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பயங்கரவாத செயல்கள், ஆயுத புரட்சி, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனையோ அல்லது குறிப்பிட்ட ஆண்டு சிறைத் தண்டனையை அபராதத்துடன் விதிக்க, புதிய குற்றவியல் சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை ராஜதுரோகம் என குறிப்பிடப்பட்டது, புதிய சட்டங்களில் தேச துரோகமாக மாற்றப்பட்டுள்ளது. பயங்கரவாதம், கொலைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியும், 'புதிய சட்டங்கள்ஆங்கிலேயர் கால சட்டங்களின் முடிவை குறிக்கின்றன. பொதுமக்களை மையப்படுத்திய சட்டங்களுடன் ஒரு புதிய சகாப்தம் துவங்குகிறது. இது, வரலாற்றில் முக்கியமான தருணம்' என்று தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களில், விபசாரம், ஓரினச்சேர்க்கை மற்றும் தற்கொலை முயற்சி போன்றவற்றுக்கான தண்டனை தொடர்பாக, சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சமீபத்திய சில ஆண்டுகளில் கும்பலாக கொலைகளில் ஈடுபடுவது சர்வசாதாரணமாகி விட்டது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தண்டனைகடுமையாக்கப்பட்டு உள்ளது பாராட்டத்தக்கதே.

இதுதவிர, எப்.ஐ.ஆர்., போடுவது, விசாரணை மேற்கொள்வது, தடயவியல் முறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போன்றவற்றுக்கு காலக்கெடு நிர்ணயித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே. பயங்கரவாத செயல்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், சிறிய அளவிலான குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவையை அறிமுகப்படுத்தி இருப்பதும், சீர்திருத்த நடவடிக்கையே.

புதிய குற்றவியல் சட்டங்கள் சிறப்பானவை என்பதை இப்போதே கூற முடியாது என்றாலும், வருங்காலங்களில் இவற்றின் அமலாக்கத்தை பொறுத்து, மாற்றங்கள் தேவையெனில் செய்வதே சரியானதாக இருக்கும். அத்துடன், புதிய சட்டங்கள் தண்டனை வழங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்காமல், நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us