PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM


பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை விட்டாகிவிட்டது.
இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உருப்படியான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது பெற்றோரின் கடமை
அப்படியான உருப்படியான இடங்களில் ஒன்றாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்குகிறது.
தற்போது வேடந்தாங்கலுக்கு வலசையாக வந்த வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்து தங்கள் குஞ்சுகளுடன் கொஞ்சி மகிழ்ந்து வருகிறது.இது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபிரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்துள்ளன.
வெளிநாடுகளில் இருந்து குழுவுடன் தனியாக வரும் ஆண் பறவைகள், வேடந்தாங்கல் சரணாலயத்தில் தன்னுடைய இணையை தேர்ந்தெடுத்து, இணை சேர்ந்து, கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து பாதுகாத்து வருகின்றன.
கூழைக் குடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன.40ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் தங்கி உள்ளன. 
பறவைகளின் குஞ்சுகள் தாங்களாகவே பறந்து இரைதேடி பழகியதும் தத்தம் பறவை குஞ்சுகளுடன் பறவைகள் தங்கள் தாயகம் கிளம்பிடும் அது அநேகமாக ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக நிகழ்ந்துவிடும் ஆகவே பறவைகளை பார்க்க விரும்புபவர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ? அவ்வளவு விரைவாக சென்று பார்க்கலாம்.


இப்போது பறவைகளை பார்ப்பதற்கு புதிய நவீன டெலஸ்கோப் கருவிகளும் பொருத்தியுள்ளனர்.
நுழைவுக்கட்டணம்,டெலஸ்கோப்பிக் கட்டணம் உண்டு.