Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/வரலாற்றுத் தடம்: கோயில் சிற்பங்களில் குதிரைகளை வடித்தவர்கள்

வரலாற்றுத் தடம்: கோயில் சிற்பங்களில் குதிரைகளை வடித்தவர்கள்

வரலாற்றுத் தடம்: கோயில் சிற்பங்களில் குதிரைகளை வடித்தவர்கள்

வரலாற்றுத் தடம்: கோயில் சிற்பங்களில் குதிரைகளை வடித்தவர்கள்

PUBLISHED ON : மே 20, 2024


Google News
Latest Tamil News
தென்னிந்தியாவை, விஜயநகர அரசர்கள் ஆட்சி செய்தபோது, பாரசீகத்தில் இருந்து ஏராளமான குதிரைகளை இறக்குமதி செய்தனர். பாமினி சுல்தான்களை எதிர்க்க அவர்களுக்கு நிறைய குதிரைகள் தேவைப்பட்டன. யாரிடம் அதிகக் குதிரைகள் இருக்கிறதோ, அவர்களே போரில் வெல்லும் வாய்ப்பு இருந்ததால், விஜய நகர மன்னர்கள் அதிகக் குதிரைகளை இறக்குமதி செய்தனர். கிருஷ்ணதேவராயர் ஆண்டொன்றிற்குப் பதின்மூன்றாயிரம் குதிரைகளுக்கு மேல் இறக்குமதி செய்தார்.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் குதிரைகளுக்குப் போர்ப்பயிற்சி கொடுக்கும், 300 பயிற்சியாளர்களும், 1,600 குதிரைச் சேவகர்களும் இருந்தனர். சிறந்த குதிரைப் படை வீரர்களுக்கு, இலவசமாகக் குதிரைகளையும் வழங்கினார். போர்க் குதிரைகளின் உடல் முழுவதும் துணியால் மூடப்பட்டு, நெற்றியில் பளபளப்பான பட்டயங்கள் கட்டப்பட்டிருந்தன. குதிரை வீரர்கள் இரண்டு, மூன்று, அடுக்குகள் உள்ள பாதுகாப்பான தோல் அங்கியை அணிந்திருந்தனர். வெயில், மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் குடைகளும் கொடுக்கப்பட்டன. குதிரைகளுக்குத் தீனி கொண்டுவரும் பணியாள்களுக்கு நிலமானியங்கள் அளிக்கப்பட்டன. கப்பல்களில் குதிரைகளைக் கொண்டு வரும் பொழுது, இறந்து போனால், குதிரைகளின் வால்களைக் கொண்டு வந்து காட்டினால், அதற்கும் வியாபாரிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது.

கிருஷ்ணதேவராயர் அரண்மனையைவிட்டு வெளியில் செல்லும் போது, நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரையில் செல்வார். வெண்கொற்றக்குடை நிழலில் குதிரை நடந்து செல்லும். குதிரைகளுக்குப் போர்ப் பயிற்சிக் கொடுக்க, இஸ்லாமிய இராவுத்தர்களும் படையில் இருந்தனர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் தோன்றிய கோயில் மண்டபங்களைத் தேர் போல் அமைத்தனர். அந்த மண்டபத் தூண்களில், முன்கால்களைத் தூக்கிப் பாய்ந்து செல்வது போன்ற, குதிரைச் சிற்பங்களையும் அமைத்தனர்.

அத்தகைய குதிரைச் சிலைகள் வேலூர் ஜலகண்டேசுவரர் கோயிலின் மண்டபத்தில் உள்ளதைக் காணலாம். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஊர்களில் உள்ள கோயில்களிலும் இத்தகைய குதிரை வீரர்கள் சிலைகளை இவர்கள் அமைத்துள்ளனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us