PUBLISHED ON : ஜூன் 17, 2024 12:00 AM

![]() |
யார் இந்தப் பாடல்களை எல்லாம் பாடுவது என எட்டிப்பார்த்த போது பத்து வயதில் இருந்து இருபது வயது வரையிலான ஆட்டிசம் பாதித்த ஆண், பெண் குழந்தைகள் பாடிக் கொண்டிருந்தனர்.
இந்த மாதிரி பாதிப்பு உள்ள குழந்தைகளை ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வைப்பது என்பதே முடியாத நிலையில் அவர்களை அமைதியாக நிற்கவைத்து பாடவைப்பது என்பது அசாத்தியமான விஷயமாகப் பட்டது.
![]() |
இசை மேதை டி.ஆர்.மகாலி்ங்கத்தின் பேத்தியும் பாடகியுமான பிரபா குருமூர்த்தி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.ரத்தத்தில் ஊறிய இசையை விட்டுவிடாமல் மேடைக்கச்சேரிகளையும் வழங்கி வருகிறார்.
![]() |
கோவிட் சமயத்தில் ஆன் லைன் மூலமக பாட்டு வகுப்பு நடத்திக் கொண்டு இருக்கும் போது, 'நார்மல்' குழந்தைகளுக்குதான் பாட்டு சொல்லித்தருவீர்களா?எங்கள் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லித்தரமாட்டீர்களா? என்று ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் கடவுள் தந்த செல்லங்களாயிற்றே.. தாரளமாக பாட்டு சொல்லித்தருகிறேன் என்று அவர்களுக்கு பாட்டு சொல்லித்தர முன்வந்தார். கோவிட் காலம் முடிந்ததும் அவர்களை ஒரு இடத்தில் வரவழைத்து பாட்டுப்பயிற்சி வழங்கினார்.
ஆரம்பத்தில் அவர்களை கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தாலும் போகப்போக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும் பாட்டு அவர்களின் மனதிற்கும், உடம்பிற்கும் மருந்தாக மாறியது. இதனால் பெற்றோர்கள் சிரமம்பாராமல் தங்கள் குழந்தைகளை பாட்டு வகுப்பில் தொடர்ந்து பங்கேற்க வைத்தனர்.
இவர்களில் பலருக்கு எழுத படிக்க வராது தங்களுக்கு எந்தப்பாடல் பிடிக்கிறதோ அந்தப்பாடலை மட்டும் மனப்பாடமாக்கிக் கொண்டு கரோக்கி (மொபைல் போனில் வரும் இசைப்பின்னனியை வைத்து பாடுவது)முறையில் பாடிவருகின்றனர்..
ஒரு குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று பாடல்கள் என்று பத்தில் இருந்து இருபது குழந்தைகளை மேடையேற்றி 'டிஆர்எம் சூர்யாஸ் ரிதம்ஸ்' என்ற பெயரில் பல இடங்களில் பாடவைத்து வருகிறேன்,.
செலவிட மனம் இருக்கிறதே தவிர பணம் கிடையாது ஆகவே,உறவினர்கள் நண்பர்கள் வீட்டு சின்ன சின்ன விசேஷங்களில் குழந்தைகள் பாடிவருகின்றனர், குழந்தைகளை பாராட்டும் போது பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் விடுவர்..அதைப்பார்க்கும் போது ஒரு நல்ல காரியத்தில் இருக்கிறோம் என மனம் சந்தோஷம் கொள்கிறது.
இதுவரை நுாறு இடங்களில் பாடியுள்ளனர்,பின்னனி இசைக்கலைஞர்களின் உதவியோடு, பெரிய மேடைகளில் இந்த குழந்தைகளை பாடவைக்க வேண்டும் என்ற கனவு உள்ளது அந்தக்கனவு விரைவில் நனவாக வேண்டும் என்று கூறும் பிரபாவிடம் பேசுவதற்கான எண்:89391 17387..
-எல்.முருகராஜ்.