Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நிஜக்கதை/ அரங்கை அதிரவைத்த சித்ராலயா கோபு...

அரங்கை அதிரவைத்த சித்ராலயா கோபு...

அரங்கை அதிரவைத்த சித்ராலயா கோபு...


PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1381888சென்னையைச் சேர்ந்தவர் இசைக்கவி ரமணன்,சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் பாரதியார் நாடகத்தின் மூலம் உலகை வலம் வருபவர்.இவர் மறைந்த தன் தந்தை அனந்தராம சேஷன் நினைவாக ஆண்டுதோறும் இருவருக்கு 'சேஷன் சம்மான்' விருது வழங்கிவருகிறார்.

இந்த ஆண்டு காதலிக்க நேரமில்லை புகழ் கதை வசனகர்த்தாவும், பல்வேறு படங்களை இயக்கியவருமான சித்ராலயா கோபுவிற்கும்,அவரது மகனும் பிரபல எழுத்தாளருமான 'காலச்சக்கரம்' நரசிம்மாவிற்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி மூலமாக விருதுகளை வழங்கினார்.

அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்றுக்கொண்டு சித்தராலயா கோபு பேசியதைக் கேட்டு அரங்கம் சிரிப்பலையால் அதிர்ந்தது, அவர் பேசியதிலிருந்து..Image 1381890நானும் டைரக்டர் ஸ்ரீதரும் பள்ளி நண்பர்கள் இருவருமே படிக்கும் போதே நாடகம் போடுவோம்..நாடகம் போட்டது போட்டது போதும் ஒழுங்கா படிச்சு உருப்படியாகிற வழியப்பாரு என்று சொல்லி என் பெற்றோர்கள் என்னை திசை திருப்பிவிட்டனர்.

நானும் படித்து முடித்து ஒரு கம்பெனியில் வேலைக்கு போனேன்.

அந்த சூழ்நிலையில்தான் நீண்ட காலம் பிரிந்திருந்த என் நண்பர் ஸ்ரீதர் என்னைத் தேடிவந்தார்.

நீ இங்கே என்ன செய்கிறாய் என்கூட வெளியே வரமுடியுமா? என்று கேட்டார்

நானும் சரி என்றேன்

நீ வந்துவிட்டால் உன் உத்தியோகத்தை யார் பார்ப்பது என்று கேட்டார்,இங்கே ஒரு உத்தியோகமும் கிடையாது, நான்தான் மேனேஜர் பியூன் எல்லாம்,ஆந்திராவில் இருந்து காலையில் ஒரே ஒரு போன் வரும் 'ஐயா உன்னாரா?' என்று கேட்பர், அவர் ஷிப்யார்டு போயிருக்கிறார் என்றதும் போனை வைத்துவிடுவர்.அவ்வளவுதான் என் 'ட்யூட்டி' அந்த 'ட்யூட்டியும்' இன்று முடிந்தது என்றேன்.

சரி வா என்று தனது புது பியட் காரில் கூட்டிச் சென்றார்

கார் நல்லாயிருக்கே என்றேன், நேற்றுதான் வாங்கினேன் என்றார்

வாயை வைத்துக்கொண்டு சும்மாயிருக்காமல் ஸ்பீடாமீட்டரில் 100 எண் போட்டிருக்கே! வண்டி நுாறு மைல் வேகத்தில் போகுமா?என்று கேட்டேன்

போய்ப்பார்த்தால் தெரிந்துவிடப்போகிறது என்று ஆக்சிலேட்டரை அழுத்த கார் பேய் வேகம் பிடித்தது, என் பொண்டாட்டி வெள்ளைப்புடவை கட்டிக்கொண்டு எதிரே வருகிறாள், அப்பா சாமி என்று கெஞ்சி கதறி நிதானமாக ஒட்டவைத்தேன்.

அப்புறம் என்னை திரும்ப கொண்டு வந்து விடவேயில்லை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் ஆனால் ஒரு காலத்திலும் என்னை உதவியாளர் என்று சொன்னது இல்லை தனது நண்பர் என்றே அறிமுகம் செய்வார்.

கல்யாணப்பரிசு படத்தை தான் இயக்கப்போவதாகவும் அதில் நகைச்சுவைப் பகுதியை நீதான் எழுதவேண்டும் என்றார் அப்படி ஆரம்பித்ததுதான் எனது சினிமா வாழ்க்கை.

வாழ்க்கையில் பார்த்த பழகிய கேரக்டர்களைத்தான் நான் உள்வாங்கி சினிமா மொழியாக்கினேன் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

நடிகர் நாகேஷ் காலையில் கோபு சார் என்று பேசி என்னிடம் அறிமுகமானார் மதியம் கோபு சாப்பிடபோலாங்களா? என்றார் மாலையில் சரிடா கோபு நாளைக்கு பேசலாம் என்று சொல்லிவிட்டு சென்றார் அந்த அளவிற்கு ஒரே நாளில் நெருக்கமாகிவிட்டார்.

எங்களுக்கு ஒரு பிரண்ட் இருந்தான் பயங்கர டூப் மாஸ்டர் என்னடா ரெண்டு நாளா ஆளைக்காணோம் என்று கேட்டால் அத்தைக்கு உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரியிலே வச்சு நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்பான் கொஞ்ச துாரம் போனால் அவன் சொன்ன 'ஆஸ்பத்திரி அத்தை' காய்கறி வாங்கிக்கொண்டு எதிரே வந்து கொண்டிருப்பார் அவனை மனதில் வைத்துதான் தங்கவேலு கேரக்டரை உருவாக்கினேன் நல்ல ஹிட் அந்த மன்னார் அண்ட் கம்பெனியை உண்மையிலேயே என் உறவினர் நடத்திக் கொண்டிருந்தார் நல்லவேளை கோவிச்சுக்கலை சிரிசசுக்கிட்டே போய்விட்டார்.

ஸ்ரீதர்,கண்ணதாசன்,விஸ்வநாதன் காம்பினேஷனில் பல நல்ல படங்கள் வந்தன அதில் எல்லாம் எனது பங்கு இருந்தது என்பது மகிழ்ச்சியான விஷயமே.

காலப்போக்கில் பாரதிராஜா,பாக்கியராஜ் எல்லாம் வந்த பிறகு சினிமா கிராமத்தின் பக்கம் திரும்பியது நான் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டேன்.

இப்போது 93 வயதாகிறது உடம்பை பார்த்துக்குங்க என்று பார்ப்பவர்கள் சொல்வர் நான் எங்கே உடம்ப பார்த்துக்கிறது உடம்புதான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும்..

காதலிக்க நேரமில்லை படத்தில் இளைஞனான அசோகன் பணக்காரர் என்று தெரிந்ததும் அசோகர் உங்க மகரா? என்று பாலையா கேட்பார் அது போல காலச்சக்கரம் நரசிம்மா எனது மகரா? என்று வியக்குமளவிற்கு தனது எழுத்து திறமையால் உயர்ந்து வருகிறார் பெருமையாக இருக்கிறது.

இருப்பதைக் கொண்டு நிறைவாய் வாழ்ந்தால் ஆயுள் உள்ளவரை ஆரோக்கியமாயும் சந்தோஷமாகவும் வாழலாம் என்று சொல்லி கோபு பேசி முடித்த போது அரங்கில் நிறைந்த கரவொலி..

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us