Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ உங்களுக்கு ஏற்ற பறவை; தேர்வு செய்யலாம் இப்படி

உங்களுக்கு ஏற்ற பறவை; தேர்வு செய்யலாம் இப்படி

உங்களுக்கு ஏற்ற பறவை; தேர்வு செய்யலாம் இப்படி

உங்களுக்கு ஏற்ற பறவை; தேர்வு செய்யலாம் இப்படி

ADDED : செப் 19, 2025 09:09 PM


Google News
Latest Tamil News
''ஒ ரு பறவை பிறந்து 30 நாட்கள் வரை, தாயின் அரவணைப்பில் இருக்கும். இதன்பின், அதை கையில் எடுத்து உணவளித்து, சிறகு முளைக்கும் பருவத்தில் பக்குவமாக பறக்க பயிற்சி அளித்து, தாமாக உணவு சாப்பிட பழக்கி, அது சுதந்திரமாக பறப்பதை, பார்த்து ரசிக்கும் வரையிலான செயல்நிலைகள் ஒரு தவம் போன்றது. அவை பறவையாக இருந்தாலும், பயிற்சியாளருக்கு ஒரு குழந்தை மாதிரி தான்,'' என்கிறார், பறவைகள் பயிற்சியாளர் சண்முகபிரியா.

தஞ்சாவூர், 'எலைட் பெட் கேர்' உரிமையாளரான சண்முகபிரியா, பலவகை பறவைகளுக்கு பயிற்சி அளிக்கிறார். 'செல்லமே' பக்கத்திற்காக இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

வெளிநாட்டு பறவைகளை மட்டுமே செல்லப்பிராணியாக வளர்க்க முடியும். ஒவ்வொரு இன பறவையின் குணாதிசயம், உணவுமுறை, பயிற்சி அளிக்கும் விதம் மாறுபடும். எந்த இன பறவையாக இருந்தாலும், அதைப்பற்றிய முழுமையாக தெரிந்த கொண்ட பிறகே, முறையாக பயிற்சி அளிக்க முடியும்.

உணவில் கவனம்

பறவை பிறந்து, 30 நாட்கள் வரை தாயின் அரவணைப்பில் இருக்கும். இதற்கு பிறகே, தாயிடம் இருந்து தனித்து பிரியும். இச்சமயத்தில், 'சிரிஞ்' மூலம், திரவ உணவு அளிக்க வேண்டும். இதற்கான உணவுகள், கடைகளில் கிடைக்கின்றன. பறவையின் உணவுக்குழாயும், சுவாசக்குழாயும் அருகருகே இருக்கும்.

முறையான பயிற்சி இல்லாமல், சுவாசக்குழாயில் உணவு செலுத்திவிட்டால், மூச்சுத்திணறி பறவை இறக்கும் அபாயமுண்டு. இதனால், குழந்தைக்கு உணவளிப்பது போல பக்குவமாக அளிக்க வேண்டும். பெரிய வகை பறவைகளுக்கு அதிக புரதம், கொழுப்பு மிகுந்த உணவே கொடுக்க வேண்டும். சிறிய வகை பறவைகளுக்கு அதையே கொடுத்தால் செரிமான பிரச்னை ஏற்படும்.

இதேபோல, பறவை தாமாக பறந்துவந்து கையில் உட்காரும் போது, அதன் நகங்கள் கூரியதாக இருப்பதால் உங்களை கீறிவிடும். இதற்கு பயந்து கீழேவிட்டுவிட்டால், மீண்டும் அது உங்களை தேடி வராது. பறவையுடன் தினமும் பேச வேண்டும். அப்போது அது உங்களின் குரலை எளிதில் அடையாளம் காணும். பறக்கும் சமயத்தில் அதனுடன் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும். சிறிது நாட்களிலேயே நீங்கள் அழைத்தால், உங்களை தேடி பறந்து வந்துவிடும்.

போதுமான வசதி

பறவையால் சிறிய சத்தத்தையும் எளிதில் உணர முடியும். வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் குரலையும், அது பதிவு செய்து கொள்ளும். மக்காவ், காக்கட்டூ, மினி மக்காவ், மாங்க் வெரைட்டி பறவைகள் பேசும் என்பதால், நாம் சொல்வதையே திரும்ப சொல்லிக்காட்டி அசத்தும்.

பெரிய வகை பறவைகள், குறைந்தபட்சம் 40 ஆண்டு உயிர்வாழும். இது, நம் சராசரி ஆயுட்காலத்தில் பாதி என்பதால், குடும்பத்தின் ஓர் அங்கமாகிவிடும். அவற்றிற்கு பெரிய இறக்கை இருப்பதோடு, சுறுசுறுப்பாக, உத்வேகத்துடன் இருப்பதால், அவை விளையாட போதுமான இடவசதி இருப்பது அவசியம்.

சிறிய வீட்டில் பெரிய பறவைகளை வளர்க்க கூடாது. அவை ஒருமுறை இறக்கை விரித்தாலே, ஜன்னல் கம்பி, சுவரில் மாட்டியிருக்கும் பொருட்களில் மோதி காயம் ஏற்படலாம் என்பதால், எந்த வகை பறவை, உங்கள் இடவசதிக்கு ஏற்றது என்பதை முடிவு செய்வது அவசியம்.

புதிதாக பறவை வாங்கியதும் குழந்தைகளின் கையில் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு பறவையை கையாள தெரியாது. நன்கு பழக்கப்படுத்திய பறவையை வாங்கி சென்றாலும், புதிய வீடு, சூழல், மனிதர்களை அவை ஏற்று கொள்ள ஓரிரு நாட்களாகலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us