PUBLISHED ON : மார் 23, 2025

நடிகர், அரசியல்வாதியை 'தலைவர்' என கொண்டாடாத இவர்கள்... கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, கணினி அறிவியல் துறையின் தேன் துளிகள்!
'உணவக பணியாளராக தன் பயணத்தை துவக்கி கோவையின் தொழிலதிபராக இருக்கும் ஜெ.ஆர்.டி., ராஜேந்திரன் சார் என் வழிகாட்டி. இன்று சிறிய அளவில், 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் நடத்தி வரும் எனக்கு ராஜேந்திரன் சார் எப்படியோ, அதுபோல எதிர்கால தலைமுறையினருக்கு நான் இருப்பேன்!'
- செ.பன்னீர்செல்வம், பி.எஸ்சி., 2ம் ஆண்டு
'எழுத்தாளர் ஜெயகாந்தன் என் மனதிற்கு உரமிட்ட கலைஞன். அவரது கூர்மையான சிந்தனை வழியில் அனைத்தையும் புதிய கோணத்தில் நான் அணுகுகிறேன். 'இரண்டு குழந்தைகள்' சிறுகதையில் வரும் 'சிவப்பி' பாத்திரம் வழியாக அவர் கற்பித்த சுயமரியாதை பாடம் என் வாழ்நாளுக்கானது; ஜெ.கே., என் ஆசான்!'
- கி.ஷப்னா, பி.எஸ்சி., 2ம் ஆண்டு
'படிக்கிறோம்; வேலைக்குச் செல்கிறோம்; வருமானத்தை செலவழித்து வாழ்கிறோம்... இப்படி தொடரும் வழக்கம் சரியானதா' எனும் கேள்வியை எனக்குள் எழுப்பிய புத்தகம்... பணக்கார தந்தை - ஏழை தந்தை. பணம் பற்றிய என் அபிப்ராயத்தை இப்புத்தகத்தின் மூலம் மாற்றிய எழுத்தாளர் ராபர்ட் டி கியோசகி என் தலைவர்!'
- த.கவியரசு, பி.எஸ்சி., 2ம் ஆண்டு
