Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தாலுக்கா ஆஃபிஸில் தவம் கிடக்க வேண்டாம் :பட்டா மாறுதல் விரும்புவோருக்கு : கலெக்டர் தகவல்

தாலுக்கா ஆஃபிஸில் தவம் கிடக்க வேண்டாம் :பட்டா மாறுதல் விரும்புவோருக்கு : கலெக்டர் தகவல்

தாலுக்கா ஆஃபிஸில் தவம் கிடக்க வேண்டாம் :பட்டா மாறுதல் விரும்புவோருக்கு : கலெக்டர் தகவல்

தாலுக்கா ஆஃபிஸில் தவம் கிடக்க வேண்டாம் :பட்டா மாறுதல் விரும்புவோருக்கு : கலெக்டர் தகவல்

ADDED : ஜூலை 21, 2011 02:35 AM


Google News

புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் பெற விரும்புவோர் இனி தாலுகா அலுவலகங்களில் தவம் கிடக்க வேண்டியதில்லை.

தொடர்புடைய வி.ஏ.ஓ.,க்களிடம் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தால் போதுமானது' என புதுக்கோட்டை கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டா மாறுதல் பெற மக்களுக்கு ஏற்படும் காலவிரயம் மற்றும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல் பெற விரும்பும் நில உடமையாளர்கள் இனி தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. மாறாக ஒவ்வொரு திங்கள் கிழமையும் தொடர்புடைய வி.ஏ.ஓ.,க்களிடம் நிலங்களுக்கு உண்டான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். இதற்கான ஒப்புதல் ரசீது உடனடியாக வழங்கப்படும். இதில், பட்டா மாறுதல் ஆணை பெற தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய தேதி குறிப்பிடபட்டிருக்கும். உட்பிரிவு இல்லாத இனங்கள் என்றால் விண்ணப்பித்த தேதியிலிருந்து இரண்டாவது வெள்ளியும், உட்பிரிவு உள்ள இனங்கள் என்றால் விண்ணப்பித்த தேதியிலிருந்து நான்காவது வெள்ளியன்றும் நிலத்துக்குண்டான மூல ஆவணங்களுடன் தாலுகா அலுவலகத்துக்கு சென்று பட்டா மாறுதல் ஆணை பெறலாம். வி.ஏ.ஓ., பணியிடம் காலியாக உள்ள கிராமங்களில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் வி.ஏ.ஓ.,க்களிடம் பட்டா மாறுதல் வேண்டி செவ்வாய்தோறும் மனு கொடுக்கலாம். மனு கொடுக்கும் போது உட்பிரிவு கட்டணம் செலுத்தவேண்டியது இல்லை. பட்டா மாறுதல் ஆணை பெறும்போது உரிய கட்டணத்தை செலுத்தினால் போதும். வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பட்டா மாறுதல் வேண்டி பெறப்படும் விண்ணப்பங்களை வி.ஏ.ஓ.,க்கள் ஒவ்வொருவரும் அதேவார வெள்ளியன்று தனது அறிக்கையுடன் வருவாய் கணக்கு நகல்களை இணைத்து தொடர்புடைய தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். இவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். உட்பிரிவு இல்லாத இனங்களுக்கு பட்டா மாறுதல் வேண்டிவரும் விண்ணப்பங்களை தொடர்புடைய துணை தாசில்தார் ஆய்வு செய்தபின் குறிப்பிட்ட நாளில் மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை மற்றும் சிட்டா நகல் வழங்கப்படும். உட்பிரிவு உள்ள இனங்களுக்கு பட்டா மாறுதல் வேண்டி வரும் விண்ணப்பங்களை தொடர்புடைய நில அளவை துணை ஆய்வாளரிடம் ஒப்படைக்கவேண்டும். இவை பரிசீலனைக்கு பின் தொடர்புடைய குறுவட்ட நில அளவரிடம் ஒப்படைக்கப்படும். இதன்மீது புலத்தணிக்கை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் தொடர்புடைய தாலுகா அலுவலகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதன்மீது உரிய விசாரணை நடத்தியபின் மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபின் தகுதியுடைய விண்ணப்பங்கள் என்றால் விண்ணப்பித்த நாளுக்கு பின்னர் வரும் நான்காவது வெள்ளியன்று தொடர்புடைய தாலுகா அலுவலகங்களில் மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்படும். இதில், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தொடர்புடைய தாலுகா அலுவலங்களை ஃபோன் எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us