மேட்டூர் வனசரகத்தில் யானைகள்வேட்டை கும்பல் அட்டகாசமா?
மேட்டூர் வனசரகத்தில் யானைகள்வேட்டை கும்பல் அட்டகாசமா?
மேட்டூர் வனசரகத்தில் யானைகள்வேட்டை கும்பல் அட்டகாசமா?
ADDED : ஜூலை 15, 2011 04:22 AM
மேட்டூர்: பச்சபாலமலை அடிவாரத்திலுள்ள கிராமத்துக்குள், யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால், மேட்டூர் வனத்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேட்டூர் வன சரகத்தின் கட்டுப்பாட்டில், கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாலமலை, பச்சபாலமலை காப்புகாடு உள்ளது. இதில், பச்சபாலமலை காப்புகாட்டின், ஒரு பகுதி மேட்டூர் வனசரகத்தின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனசரகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
சென்னம்பட்டி வனசரகத்திலுள்ள யானைகள், கோடைக் காலத்தில் தண்ணீர் தேடி, மேட்டூர் சரகத்திலுள்ள பச்சபாலமலை அடிவார பகுதிக்கு இடம் பெயரும்.மேட்டூர் சரகத்தில் உள்ள கும்பாரப்பட்டி, தண்டா, நீதிபுரம் பகுதியிலுள்ள ஏரிகளில், கோடைக் காலத்திலும் குட்டை போல, தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதால், அப்பகுதியில் சுற்றி திரியும் யானைகள், கோடை முடிந்தவுடன் சென்னம்பட்டி சரக வனப்பகுதிக்கு சென்று விடும். இந்நிலையில், இரு யானைகளும், ஒரு குட்டி யானையும், சில நாட்களாக மேட்டூர் சரகம் பச்சபாலமலை அடிவாரத்திலுள்ள கும்பாரப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ளது.இரு நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவரை யானை விரட்டியதால், தப்பியோடிய அவர், உயிர் பிழைத்தார். பகலில் வனத்தில் பதுங்கும் யானைகள், இரவில் கிராமத்தில் புகுந்து விடுகிறது. அதனால், பட்டாசுகளை கொளுத்தி யானைகளை சென்னம்பட்டி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக, கோடைக் காலத்தில், 10க்கும் மேற்பட்ட யானைகள், கூட்டமாக, மேட்டூர் சரகத்தில் முகாமிடும். தற்போது இரு யானைகள், ஒரு குட்டி யானை மட்டும், கும்பாரப்பட்டி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது, மேட்டூர் வனசரக ஊழியர்களை, குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.வனப்பகுதியில், வேட்டை கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டால், யானைகள் திசைமாறி, கும்பாரபட்டி வனப்பகுதிக்கு வந்திருக்கக் கூடும் என, கருதுகின்றனர். இதையடுத்து, மேட்டூர் சரக வனத்துறையினர், எல்லையோர கிராமங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.