Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் தினம் ஒரு தற்கொலை நாடகம்!

கோவையில் தினம் ஒரு தற்கொலை நாடகம்!

கோவையில் தினம் ஒரு தற்கொலை நாடகம்!

கோவையில் தினம் ஒரு தற்கொலை நாடகம்!

ADDED : ஜூலை 26, 2011 09:33 PM


Google News

கோவை : உள்ளூர் ஊடகங்களின் ஆதரவால், தனிநபர் பிரச்னைகளுக்காக தற்கொலை நாடகம் நடத்துகிற இடமாக, கோவை கலெக்டர் அலுவலகம் மாறி வருகிறது.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறை கேட்பு முகாம் நடக்கிறது. இதில், பொதுப் பிரச்னைகள், பட்டா, கடனுதவி போன்றவற்றுக்கான மனுக்கள் மட்டுமே பெறப்படுகின்றன. சமீப காலமாக, குடும்பப் பிரச்னை, தனி நபர்களுக்கான பிரச்னை தொடர்பான மனுக்களும் அதிகமாக வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, அரசு அதிகாரிகளால் தலையிட முடியாத அல்லது தீர்த்து வைக்க முடியாத பிரச்னைகளாகும். இதுபோன்ற மனுக்களைத் தரும் நபர்கள், வரும்போதே நூதன போராட்டத்துக்கான திட்டத்துடன் வருகின்றனர். இவர்களுக்கு 'இலவச' விளம்பரமும் கிடைத்து விடுகிறது. இதன் காரணமாக, இதுபோன்ற நூதனப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுவும் ஒரு கட்டத்தில், எடுபடாத காரணத்தால் சமீபகாலமாக தற்கொலை மிரட்டல் நாடகங்கள் அதிகரித்துள்ளன. நிலமோசடி, காதலன் கை விட்டார், கொடுத்த கடனுக்கு கொலை மிரட்டல் என பலவிதமான காரணங்களுக்காக, தீக்குளித்துத் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டும் நபர்கள் அதிகமாகி வருகின்றனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், 'தற்கொலை' என்பதை அதிகாரிகள் மற்றும் தங்களுக்கு எதிரான தனி நபர்களை மிரட்டவே பயன்படுத்துகின்றனர். அரசு நிர்வாகத்திடம் நியாயம் கிடைக்காததால், மனம் வெறுத்து தற்கொலை செய்யத் துணியும் பலருடைய போராட்ட முயற்சியையும் இத்தகைய நபர்களின் 'மிரட்டல் நாடகங்கள்' அவமானப்படுத்துவதோடு, காவல்துறையினரைக் கடுப்பேற்றுவதாகவும் உள்ளன. இதுபோன்ற, 'தற்கொலை முயற்சி' தகவல்கள் வருவதைப் போலீசாரால் உதாசீனப்படுத்த முடிவதில்லை. நேற்றைய நாடகம்: கோவை கலெக்டர் அலுவலகம் முன்பாக, நேற்றும் ஒரு தற்கொலை முயற்சி நடந்தது. பிச்சனூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி மல்லிகா ஆகியோர், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக வழக்கம்போல் பத்திரிகையாளர்களுக்குத் தகவல் வந்தது. ஏராளமான நிருபர்கள், போட்டோகிராபர்கள், போலீசார் குவிந்தனர். பகல் 11.40 மணியளவில், ரயில்வே ஸ்டேஷன் பகுதியிலிருந்து நான்கைந்து பேர்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். தலைமை தபால் தந்தி ஆபீஸ் முன்பாக, அவர்களை போலீசார் எதிர்கொண்டதும், தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டனர். இருவரிடமிருந்தும் மண்ணெண்ணெய் கேனைப் பறித்த போலீசார், இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அப்போது, அவர்களுடன் வந்தவர்கள், போலீசார் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கணவன், மனைவி உட்பட அங்கிருந்த 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்கொலைக்கு முயன்ற செல்வராஜ் கூறுகையில், ''நான் 'பைக்' வாங்குவதற்காக, ஒரு தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடன் வாங்கினேன்; குடும்ப கஷ்டத்தால், சில மாதங்கள் தவணை கட்ட முடியவில்லை. அந்த பைனான்ஸ் நிறுவனத்தினர், என் வீட்டுக்கு வந்து, ஆளும்கட்சி வி.ஐ.பி.,யின் பெயரைச் சொல்லி, என்னைக் கொன்று விடுவதாக மிரட்டினர். போலீசில் புகார் செய்தும் பயனில்லை; அதனால்தான், நாங்களே தற்கொலை செய்ய முயன்றோம்,'' என்றார். சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தினர் கூறுகையில்,''அவர் கடன் வாங்கியதிலிருந்து ஒரே ஒரு மாதம்தான் தவணை கட்டினார்; 5 மாதங்களாகக் கட்டவில்லை. எங்களது பிரதிநிதிகள் யாரும், எந்த அரசியல்பிரமுகரின் பெயரையும் பயன் படுத்தவில்லை; பிரச்னையை திசை திருப்ப, அவர்களாகவே அந்தப் பெயரைச் சொல்லியிருக்கலாம்,'' என்றார். இந்த விவகாரத்தில், ஆளும்கட்சி பிரமுகர் பெயரை இழுத்ததன் மூலமாக, பிரச்னைக்கு அரசியல் சாயம் பூசும் முயற்சி நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. மக்கள் பிரச்னைக்காக இல்லாமல், தனி நபரின் பிரச்னையை முன்னிறுத்தி நடந்த இந்த போராட்டத்தால், ஏராளமான போலீசாரின் பல மணி நேர உழைப்பு விரயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர் பிரச்னைகளுக்காக நடக்கும் இத்தகைய 'தற்கொலை' நாடகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், தற்கொலை நாடகம் போடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி தற்கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால், 'தற்கொலை நாடகம்' என்பது தினம் நடக்கும் பகல் நேர மெகா சீரியலாகிவிடும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us