Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கோவளத்தில் பஸ் நிலையம் அமையுமா? : பயணிகள் எதிர்பார்ப்பு

கோவளத்தில் பஸ் நிலையம் அமையுமா? : பயணிகள் எதிர்பார்ப்பு

கோவளத்தில் பஸ் நிலையம் அமையுமா? : பயணிகள் எதிர்பார்ப்பு

கோவளத்தில் பஸ் நிலையம் அமையுமா? : பயணிகள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 03, 2011 04:07 AM


Google News

கோவளம் : கோவளம் ஊராட்சியில் பஸ் நிலையம் அமைக்கப்படாததால், பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு அடுத்து அமைந்துள்ளது கோவளம் ஊராட்சி. திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு அமைந்துள்ள இப்பகுதியில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அழகிய கடற்கரை, பாரம்பரியம் மிக்க ஆன்மிக தளங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ள இப்பகுதி, புறநகரின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. உள்ளூர் மற்றுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதிக்கு அதிகம் வந்து செல்வதால், சென்னையின் முக்கியப் பகுதிகளான பாரிமுனை, கோயம்பேடு, திருவொற்றியூர், தி.நகர், தம்பரம், பல்லாவரம் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, இப்பகுதிக்கு தினசரி நூற்றுக்கணக்கான மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.



அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டும், இங்கு பஸ் நிலையம் இல்லை. இதனால், பஸ்கள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்து, பேசிய போக்குவரத்து ஊழியர் ஒருவர், ''இரவு நேரங்களில் இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால், ஊழியர்களுக்கென இதுவரை ஓய்வு அறை அமைக்கப்படாததால், பஸ்சிலேயே படுத்து உறங்க வேண்டியுள்ளது. போதிய பாதுகாப்பின்றி உறங்கும் போது, எங்களின் பணம் மற்றும் டிக்கெட் கட்டுகள் அவ்வப்போது திருடு போகின்றன. குளியல் அறை, மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இதுவரை செய்து கொடுக்கப்படாததால், நீண்ட காலமாக தவித்து வருகிறோம்,'' என்றார்.



இடமின்றி தவிக்கும் நேரக்காப்பாளர்: கோவளம் பஸ் நிறுத்தத்திற்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இதுவரை அங்கு நேரக் காப்பாளர் அலுவலகம் அமைக்கப்படவில்லை. இதனால், அங்கு பணிபுரியும் நேரக்காப்பாளர், தனியார் செல்போன் கடை ஒன்றின் முகப்பில் அமர்ந்து, பணியை மேற்கொண்டு வருகிறார். தனியார் கடைகளின் முகப்பு அல்லது மரத்தடியே நேரக்காப்பாளர் அலுவலகமாக உள்ளதால், ஆவணங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க முடியாமல்,'டைம் கீப்பர்' தவித்து வருகிறார். வெயில் மற்றும் மழைக் காலங்களில், ஒதுங்குவதற்கு கூட அருகில் இட வசதி இல்லாததால், மரத்தடியிலோ அல்லது அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களின் முகப்பிலோ தான், பயணிகள் நிற்க வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக, பல்வேறு வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us