ADDED : ஆக 28, 2011 12:06 AM
மயிலம் : மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் ரேஷன் கடை முன்பு கிராம மக்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலம் ஒன்றியம் அவ்வையார்குப்பம் ரேஷன் கடையில் நடுக்குப்பம், பெரிய அண்டப்பட்டு, அவ்வையார்குப்பம் கிராமங்களைச் சேர்ந்த 630 குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். நேற்று காலை 11 மணி முதல் ரேஷன் கடை முன்பு பலர் கூடியிருந்தனர். மாலை 4.30 மணிவரை பொருட்கள் வாங்க முடியாததால் ஆத்திரமடைந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப் இன்ஸ்பெக்டர் ரவிதாஸ் மாலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை தினமும் திறந்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் குமார் உறுதியளித்தார். இதனால் மாலை 5.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.


