Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாளை நவராத்திரி இரண்டாம் நாள்

நாளை நவராத்திரி இரண்டாம் நாள்

நாளை நவராத்திரி இரண்டாம் நாள்

நாளை நவராத்திரி இரண்டாம் நாள்

ADDED : செப் 27, 2011 11:47 PM


Google News
நாளை அம்பிகையை வராஹியாக அலங்கரித்து வழிபடவேண்டும். வராஹ (பன்றி) முகம் கொண்டவளாகவும், தெத்துப் பற்களால் பூமிப்பந்தை தாங்குவது போலவும் அலங்கரிக்க வேண்டும். கைகளில் சூலம், உலக்கை ஆகிய ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும். இவளை வணங்கினால், போட்டி பொறாமையால் தொந்தரவு தரும் எதிரிகளிடம் இருந்து விடுதலை பெறலாம். நாளை மதுரை மீனாட்சியம்மன், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் கோலம் இது. அம்மனும், சுவாமியும் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் பெருமை மதுரைக்குரிய சிறப்பாகும். சித்திரை தொடங்கி ஆடி வரை மீனாட்சியும், ஆவணி முதல் பங்குனி வரை சொக்கநாதரும் அரசாட்சி செய்வதாக ஐதீகம். பிருங்கி முனிவர், சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். ஒருமுறை கயிலையில் சிவனும், அம்பிகையும் அமர்ந்திருந்த போது, இவர், சிவபெருமானை மட்டும் தனித்து வலம் வந்து வணங்கினார். அம்பிகையின் பெருமையை உணர்த்த விரும்பிய சிவன், தேவியை நெருங்கி அமர்ந்தார். ஆனால், முனிவர் வண்டாக உருவெடுத்து சிவபார்வதிக்கு நடுவில் புகுந்து, இறைவனை மட்டும் வலம் வந்தார். கோபத்தில் பார்வதி பிருங்கிமுனிவரின் சக்தி அனைத்தையும் வற்றச் செய்தாள். ஆனாலும், பிருங்கி சிவனருளால் மூன்றாவது காலும், ஊன்றுகோலும் பெற்றுக் கொண்டு தனது இயக்கத்தைத் தொடர்ந்தார். சிவனுக்கு சமம் சக்தி என்பதை உணர்த்து வதற்காக, அம்பாள் சிவனின் உடலில் பாதி வேண்டி தவமிருந்தாள். இதன்பலனாக ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றாள். ஆண்பாதி, பெண்பாதியாக இணைந்து காட்சியளித்த இக்கோலமே அர்த்தநாரீஸ்வரர் ஆகும். 'அர்த்தம்' என்றால் 'பாதி', 'நாரி' என்றால் 'பெண்'. 'அர்த்தநாரி' என்றால் ஈஸ்வரனில் பாதியாக இணைந்த பெண்'. இந்த வடிவத்தைத் தரிசித்தால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைத்திருக்கும். நாளை அர்த்த நாரீஸ்வர வடிவில் மீனாட்சியை வணங்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

நாளைய நைவேத்யம்: தயிர் சாதம்

பாட வேண்டிய பாடல்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us