ADDED : அக் 13, 2011 12:41 AM
திண்டுக்கல் : ஒரு ஓட்டுச் சாவடிக்கு இரண்டு ஏஜன்ட்களை, வேட்பாளர்கள்
நியமித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஏஜன்ட் மட்டுமே ஓட்டுச்சாவடிக்குள்
இருக்கவேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரசாரம்
மும்முரமாக நடந்துவரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அலுவலர்கள்
மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்களின், 'பூத்' ஏஜன்ட்கள் நியமித்துக்கொள்ள
விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. போட்டோவுடன் அடையாள அட்டை
வேட்பாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்
பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர், தங்கள் ஊராட்சி, வார்டுக்கு உட்பட்ட
ஓட்டுச்சாவடிகளில், தலா இரண்டு ஏஜன்ட்களை நியமித்துக் கொள்ளலாம். ஆனால்
ஓட்டுச்சாவடியில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருக்க அனுமதியளிக்கப்படும்.
ஓட்டுச்சாவடியில் உள்ள ஏஜன்ட், டீ குடிக்க அல்லது பகல் உணவுக்காக வெளியே
செல்ல விரும்பினால் அவருக்கு மாற்றாக கூடுதலாக நியமிக்கப்பட்டவர்
அனுமதிக்கப்படுவார். இதே போல் ஓட்டு எண்ணிக்கையின் போ தும், ஒரு
வேட்பாளருக்கு, ஒரு டேபிளுக்கு ஒரு ஏஜன்ட் நியமித்துக்கொள்ள
அனுமதிக்கபடும்.
ஊராட்சியில் உள்ள மொத்த ஓட்டுக்களை பொறுத்தும், எத்தனை டேபிளில் ஓட்டுக்கள்
எண்ணப்படுகிறது என்பதை பொறுத்தும், இந்த எண்ணிக்கை வேறுபடும். இதை
தேர்தல் அதிகாரிகளிடம் தெரிந்துகொண்டு ஏஜன்டுகளை நியமனம் செய்து
கொள்ளலாம்.


