Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"2ஜி' ஒதுக்கீடு குறித்த டிராய் அறிக்கை பற்றி சுப்ரீம் கோர்ட் விமர்சனம் : தன்னாட்சி அமைப்பின் லட்சணம்

"2ஜி' ஒதுக்கீடு குறித்த டிராய் அறிக்கை பற்றி சுப்ரீம் கோர்ட் விமர்சனம் : தன்னாட்சி அமைப்பின் லட்சணம்

"2ஜி' ஒதுக்கீடு குறித்த டிராய் அறிக்கை பற்றி சுப்ரீம் கோர்ட் விமர்சனம் : தன்னாட்சி அமைப்பின் லட்சணம்

"2ஜி' ஒதுக்கீடு குறித்த டிராய் அறிக்கை பற்றி சுப்ரீம் கோர்ட் விமர்சனம் : தன்னாட்சி அமைப்பின் லட்சணம்

ADDED : செப் 22, 2011 01:10 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை' என, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) அளித்த அறிக்கை வியப்பளிப்பதாக உள்ளது. அது, தன்னாட்சி பெற்ற அமைப்பு தானா என்ற சந்தேகம் எழுகிறது என, சுப்ரீம் கோர்ட் நேற்று விமர்சித்தது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் கூறப்பட்டது. இந்த அறிக்கை, நாட்டையே உலுக்கியது. இதனால், அமைச்சர் பதவியிலிருந்து ராஜா நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான விலையை முடிவு செய்ததில் முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு மட்டுமல்ல; அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் பொறுப்பு உண்டு. மத்திய அமைச்சரவை தான் இந்த முடிவை எடுத்தது. எனவே, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி மனு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் புதிய குற்றவாளியை சேர்க்கும் அதிகாரம், விசாரணை கோர்ட்டுக்குத் தான் உண்டு; சுப்ரீம் கோர்ட்டுக்கு இதில் தலையிட உரிமையில்லை' என, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் நேற்று முன்தினம் வாதாடினார். இந்நிலையில், இந்த விசாரணை நேற்றும் நடந்தது.

'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. தொலைத்தொடர்புத் துறையையோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையோ அரசுக்கு வருவாயைத் தேடித் தருபவையாகக் கருதக்கூடாது. அது மட்டுமல்லாது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஏல முறை மற்றும் புதிய ஆபரேட்டர்களுக்கான கட்டண உயர்வு எதையும் நாங்கள் பரிந்துரை செய்யவில்லை' என, டிராய் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிராயின் இந்த அறிக்கை குறித்து வருத்தம் தெரிவித்த சி.பி.ஐ., 'இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது' என, தெரிவித்திருந்தது.

இது குறித்து வழக்கறிஞர் வேணுகோபால் குறிப்பிடுகையில், 'டிராயின் இந்த அறிக்கையை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்வர். எனவே, டிராய் அறிக்கையை நாங்கள் ஏற்கவில்லை' என்றார்.

நீதிபதிகள் குறிப்பிடுகையில், 'டிராய் அளித்துள்ள அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. தன்னாட்சி பெற்ற அமைப்பு தான் இந்த அறிக்கையை அளித்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தலைமை கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி அளித்துள்ள அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ., தரப்பில் 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சி.ஏ.ஜி., குறிப்பிட்டுள்ளதை விட சி.பி.ஐ., குறைத்து கூறியுள்ளது. இந்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வாருங்கள். டிராய் அறிக்கையில் ஊழலே நடக்கவில்லை என்பது போல கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கை ஏன், '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்' என குறிப்பிடுகிறீர்கள்' என்றனர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் : '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பின்னரே, வழக்கு விசாரணை துரிதமாக நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை வேண்டும் எனக் கோரி, மனு தாக்கல் செய்தவர்களை விசாரிக்கக் கூடாது. முறைகேடுகள் நடக்கும் போது, அதை எதிர்த்து முறையான அமைப்பை அணுக, சமூகத்தில் இது போன்ற விழிப்பான நபர்கள் இருக்க வேண்டியது அவசியம்.

மனுதாரர்கள் மேற்கொண்ட முயற்சியால் தான், '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள், சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னரே, இந்த வழக்கு விசாரணையும் துரிதமடைந்தது; சரியான பாதையில் சென்றது. இந்த வழக்கின் விசாரணையில், எந்த வகையிலும் கோர்ட் உத்தரவுகள் தடை ஏற்படுத்தவில்லை. சி.பி.ஐ.,யின் விசாரணைக்கு வலு சேர்ப்பதாகவே சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் அமைந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us