Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத பஸ் ஸ்டாண்ட் : மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத பஸ் ஸ்டாண்ட் : மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத பஸ் ஸ்டாண்ட் : மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத பஸ் ஸ்டாண்ட் : மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி

ADDED : ஆக 15, 2011 02:30 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூர் பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில், தரைத்தளம், பயணிகள் நிழற்குடை, கழிப்பிடம், பஸ் பேஸ் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாததால், மாணவர்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த, 6வது கி.மீ., தூரத்தில் பேளூர் பேரூராட்சி உள்ளது. பேளூர், சிங்காரத்தோப்பு, ராமநாதபுரம், பெருமாபாளையம், கண்ணனூர் ஆகிய பிரதான குடியிருப்பு பகுதிகளை கொண்ட பேளூர் பேரூராட்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அருநூற்றுமலை, சந்துமலை, நெய்யமலை, கல்ராயன்மலை கிராமங்கள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருவதால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லவும், விவசாய விலைபொருட்களை விற்பனை செய்யவும் பேளூர் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், வியாபாரிகள், புராண சிறப்பு மிக்க பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமாக விளங்கிவரும் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் என, தினந்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், பேளூருக்கு வந்து செல்கின்றனர். அதனால், சேலம், ஆத்தூர், வாழப்பாடி, கருமந்துறை, திருவண்ணாமலை, அருநூற்றுமலை, சந்துமலை, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இருந்து தினந்தோறும், 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், பேளூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுந்த பேளூரில், பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தாததால், நெரிசல் மிகுந்த கடைவீதியிலேயே பஸ்கள் நின்று சென்றன. அதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து, ஒருவழியாக அயோத்தியாப்பட்டணம்-கருமந்துறை சாலையில், வாரச்சந்தை செயல்பட்டு வந்த நிலத்தின் ஒரு பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, கடைவீதியில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட் அதிரடியாக வாரச்சந்தை இடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், ஒரு வணிக வளாக கடையை தவிர, பயனிகளுக்கு தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை அங்கு மேற்கொள்ளப்படவில்லை. அதனால், பேளூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிழற்குடை வசதியில்லாததால், மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார கழிப்பிட வசதிகள் மட்டுமின்றி, பஸ் பேஸ், தரைத்தளம் என எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு கிடையாது. எனவே, பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்கு சுற்றுச்சுவர், தரைத்தளம், பஸ் பேஸ், பயணிகள் நிழற்குடை, சுகாதார கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, பேளூர் பேரூராட்சி மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us