சங்கரராமன் கொலை வழக்கு விவாதம் அடுத்த மாதம் 5ல் துவங்குகிறது
சங்கரராமன் கொலை வழக்கு விவாதம் அடுத்த மாதம் 5ல் துவங்குகிறது
சங்கரராமன் கொலை வழக்கு விவாதம் அடுத்த மாதம் 5ல் துவங்குகிறது
ADDED : ஆக 18, 2011 12:29 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடைபெற்று வரும் சங்கரராமன் கொலை வழக்கு
விவாதம், அடுத்த மாதம் 5ம் தேதி துவங்குகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்
கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு, புதுச்சேரி, முதன்மை மாவட்ட
மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 2009ம் ஆண்டிலிருந்து நடந்து
வருகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை முடிந்துவிட்ட நிலையில்,
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களிடம் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தியபோது
பதிவு செய்யப்பட்ட ஒன்பது வீடியோ கேசட்கள் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்
கோரிக்கைப்படி திரையிடுவதற்கு நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார். இதை
தொடர்ந்து, கடந்த 11ம் தேதி மூன்று கேசட்களும், அடுத்த நாள்(12ம் தேதி)
மூன்று கேசட்களும் நீதிபதியின் தனி அறையில் திரையிடப்பட்டன. தொடர்ந்து
நேற்று பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது
குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ரகு, சுந்தரேசன் உள்ளிட்ட நான்கு பேர்
மட்டுமே ஆஜராகியிருந்தனர். இதன் பின்னர், நீதிபதி முன்னிலையில்
திரையிடப்பட்ட ஒன்பது வீடியோ கேசட்டில் ஜெயேந்திரர், அப்பு, அப்ரூவர் ரவி
சுப்ரமணியம், கதிரவன் உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்திய போது பெறப்பட்ட
வாக்குமூலங்கள் அனைத்தும் 'டிவி' மூலம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதை
தொடர்ந்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று,
நீதிபதி ராமசாமி தெரிவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு சார்பில்
வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜரானார். இவ்வழக்கில், வரும் 5ம் தேதியிலிருந்து
அரசு மற்றும் எதிர்தரப்பு விவாதம் துவங்க உள்ளது. முதற்கட்டமாக அரசு தரப்பு
விவாதம் நடைபெறும்.


