Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரி மாவட்டத்தில் 42% குழந்தை திருமணம் :யுனிசெஃப் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கி.கிரி மாவட்டத்தில் 42% குழந்தை திருமணம் :யுனிசெஃப் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கி.கிரி மாவட்டத்தில் 42% குழந்தை திருமணம் :யுனிசெஃப் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கி.கிரி மாவட்டத்தில் 42% குழந்தை திருமணம் :யுனிசெஃப் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ADDED : ஜூலை 11, 2011 11:52 PM


Google News
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது. இதனால், தாய், சேய் மரணம் அதிகளவில் நடப்பதாகவும் யுனிசெஃப் ஆய்வில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது. பின் தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி மொத்தம், 18 லட்சத்து, 83 ஆயிரத்து, 731 பேர் வசிக்கின்றனர். இவர்களில், ஆண்கள், 9 லட்சத்து, 63 ஆயிரத்து, 152 பேரும், பெண்கள், 9 லட்சத்து, 20 ஆயிரத்து, 579 பேரும் வசிக்கின்றனர். மாவட்டத்தின் மொத்த பரப்பு, 5,.128 ச.கி.மீ., ஆகும். இவற்றில் வெறும், 370 ச.கி.மீ., பரப்பில் மட்டும் தான் மக்கள் வசிக்கின்றனர். மற்ற இடங்களில் மலையும், மலை சார்ந்த பரப்பும், விவசாய நிலங்களும் காணப்படுகிறது. இங்கு தமிழகத்தில் அதிகளவு மலைகிராமங்கள் காணப்படுகிறது. அதனால், போதிய விழிப்புணர்வு, கல்வியறிவு இல்லாத மலைக்கிராமங்களில் மக்கள் இன்னும் மலைவாழ் மக்களாக வசிக்கின்றனர். அரசு திட்டங்கள் மலைக்கிராமங்களை சென்றடைவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால், தாய், சேய் மரணம், குழந்தை திருமணம், கவுரவ கொலைகள் ஆகியவை அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட மக்கள் தொகை குறைந்த பகுதியில், பள்ளி சிறுமிகள், கழுத்தில் தாலியை கட்டிகொண்டு பள்ளிக்கு சென்று வரும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலையில் குழந்தை திருமணத்தை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் யுனிசெஃப் நிறுவனம் ஆகியவை இணைந்து குழந்தை நேய கிராம திட்டத்தை துவக்கியது. ஒன்றிய அளவில், போலீஸார், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பி.டி.ஓ., க்கள், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளித்து, கிராமங்களில் குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யுனிசெஃப் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது: இந்திய திருமண சட்டப்படி, 18 வயதுக்கு ஒரு நாள் குறைவாக உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தாலும், அது குழந்தை திருமணமாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 42 சதவீதம் குழந்தை திருமணம் நடப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக சொந்தங்கள் இறப்பு, பள்ளிகளை விட்டு இடைநிற்கும் சிறுமிகள், அவசர உறவு திருமணம் ஆகியவற்றில் குழந்தை திருமணம் அதிகளில் நடக்கிறது. கிராமங்களில் பெண்களை உடனடியாக திருமணம் செய்து அனுப்பி விட வேண்டும் என்ற மனோரீதியில் பெற்றோர், குழந்தைகளுக்கு திருமணம் செய்கின்றனர்.

குழந்தை திருமணத்தால், பெண்களுக்கு, 60 சதவீதம் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மகப்பேறு மரணம், குழந்தை பிறப்பில் சிக்கல், குறைபாடு குழந்தை பிறப்பு, கர்ப்பபை வளர்ச்சியின்மை ஆகியவை ஏற்படுகிறது.

மனம் மற்றும் உடல்நிலையிலும் பக்குவம் அடையாததால் குடும்ப தகராறு, திருப்தியின்மை, மனமுறிவு, கொலைகள் நடக்கிறது. அதனால், குழந்தை திருமணம் குறித்து யாரும் தகவல் அறிந்தால், 89396 - 97884 என்ற மொபைல்ஃபோன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும். ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்படும் இந்த தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் செய்பவர்கள், உடந்தையாக இருப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us