Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/துணை நகரம் அமைக்க நிலம் எடுத்த விவகாரம் விஸ்வரூபம் : தேசிய அளவில் பெரிதாக்க விவசாயிகள் திட்டம்

துணை நகரம் அமைக்க நிலம் எடுத்த விவகாரம் விஸ்வரூபம் : தேசிய அளவில் பெரிதாக்க விவசாயிகள் திட்டம்

துணை நகரம் அமைக்க நிலம் எடுத்த விவகாரம் விஸ்வரூபம் : தேசிய அளவில் பெரிதாக்க விவசாயிகள் திட்டம்

துணை நகரம் அமைக்க நிலம் எடுத்த விவகாரம் விஸ்வரூபம் : தேசிய அளவில் பெரிதாக்க விவசாயிகள் திட்டம்

ADDED : ஆக 01, 2011 01:50 AM


Google News

திருவள்ளூர் : தி.மு.க., ஆட்சிக் காலத்தில் துணை நகரத்துக்காக கையகப்படுத்திய விளை நிலங்கள், மீண்டும் விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதைக் கண்டித்து, விவசாயிகள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இப்போராட்டம், தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.பூந்தமல்லி அருகே திருமழிசையில் துணை நகரம் அமைக்க, தமிழக அரசு 1996ல் திட்டமிட்டது. இதன்படி, திருமழிசை அருகே குத்தம்பாக்கம், வெள்ளவேடு, பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஐந்து கிராமங்களில் நிலமெடுப்பு நடவடிக்கை 1998ல் துவங்கியது.கிராமப் பகுதிகளில் 1,695 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, ஏக்கருக்கு 90 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயித்து, சிறு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பெற முயற்சி நடந்தது. நிலம் தர மறுத்த விவசாயிகளிடம், அதிகாரிகள் அச்சுறுத்தி 466 ஏக்கர் நிலத்தை தீர்வனம் செய்து விட்டதாக அறிவித்தனர்.



இதற்கிடையே, விவசாய நிலங்களை அழித்து துணை நகரம் அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இத்திட்டம் கைவிடப்பட்டதாக தமிழக அரசு 2006ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.ஆனால், தீர்வனம் செய்யப்பட்டதாக அறிவித்த 466 ஏக்கர் நிலத்தை, அதன் உரிமையாளர்களிடம் அரசு திரும்ப ஒப்படைக்கவில்லை. அரசு தரப்பில் 466 ஏக்கர் தீர்வனம் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தாலும், உண்மையில் நிலத்துக்கான பணம், 72.24 ஏக்கருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில், பணம் பெற்றுள்ள விவசாயிகளும் மிரட்டலுக்கு அஞ்சியே பணிந்தவர்கள் என்பதால், தற்போது பணத்தை திருப்பித் தர தயாராக உள்ளனர்.துணை நகரத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தீர்வனம் செய்யப்பட்டதாகக் கூறும் நிலங்களை தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இப்பிரச்னைக்காக மீண்டும் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.இதுகுறித்து, அனைத்து கிராம விவசாயிகள் மற்றும் உழவர்கள் பாதுகாப்பு நலச் சங்கச் செயலர் பத்மநாபன் கூறும்போது, ''அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளை அச்சுறுத்தி கையகப்படுத்திய விவசாய நிலங்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.



திருமழிசை துணை நகரத் திட்டத்தில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்காக அச்சுறுத்தி வாங்கப்பட்ட நிலத்தை அரசு திரும்ப ஒப்படைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே, நாங்கள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தோம்.ஆனால், இங்கு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு கட்டுவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இப்பகுதியில் எவ்வளவோ தரிசு நிலங்கள் இருக்கும் போது, அதையெல்லாம் விட்டு விட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?எங்களது கோரிக்கையை தற்போதைய அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனம், ஒடிசாவில் போஸ்கோ ஆலையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது போல், எங்களுடைய போராட்டமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்த உள்ளோம்,'' என்றார்.இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''இப்பிரச்னை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.



பி.முரளிதரன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us