ADDED : ஜூலை 28, 2011 03:05 AM
ஈரோடு: அரசு பள்ளியில் 6, 7, 8 வகுப்பில் கல்வி பயிலும் அனைத்து மாணவ,
மாணவிகளிடம் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் பொருட்டு, யூனியன் அளவில்
ஆசிரியர்களுக்கான பயிற்சி ஈரோட்டில் நேற்று நடந்தது.அரசு பள்ளிகளில் தொடக்க
நிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறையில்
உள்ளது.
தன்னம்பிக்கையுடன் ஆசிரியர் பேசும் எளிய ஆங்கிலத்தை பின்பற்றி,
மாணவர்களும் தானாகவே பேசுவதற்கு இத்திட்டம் அமைக்கப்பட்டது. ஆங்கிலத்தில்
கதை சொல்வது, கேள்வி கேட்பது, கட்டளையிடுவது போன்றவை
கற்பிக்கப்பட்டது.பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் ஆங்கிலம் குறித்த
பயம், தயக்கம், வெட்கம் குறைந்தன. வகுப்பறைகளில் மட்டுமின்றி, எந்த
மாதிரியான சூழ்நிலையையும் சந்திக்கும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது. இதை
தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு
வரையுள்ள அனைத்து உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் எளிமையான ஆங்கிலப்
பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் யூனியன் அளவிலான
பயிற்சி, ஈரோட்டில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார்
பயிற்சியை துவக்கி வைத்தார்.