ADDED : அக் 07, 2011 12:55 AM
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு கன்யகாபரமேஸ்வரி அம்மன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா நடந்தது.
சென்னை பாரிமுனையில் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி தேவஸ்தானம் உள்ளது. இங்கு ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன், மூல விக்ரகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். நவராத்திரி உற்சவம் கடந்த மாதம் 28ம் தேதி கோலாகலமாக துவங்கியது. விஜயதசமியை முன்னிட்டு, கன்யகாபரமேஸ்வரி அம்மன், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், கோவிலின் நான்குபுறங்களிலும் வீதிஉலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வாணவேடிக்கை மற்றும் சிலம்பாட்டமும் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கன்யகாபரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான அறக்கட்டளை செயலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


