ADDED : ஆக 11, 2011 11:05 PM
திருச்சுழி : திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் இன்று நடக்கும் ஆடி தபசை முன்னிட்டு சுற்று பகுதி பக்தர்கள் சுவாமி,அம்மனை தரிசிப்பர்.
திருச்சுழி திருமேனிநாதர் உடனுறை துணை மாலையம்மன் கோயில் ஆடி தபசு விழா கடந்த 3 ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் வெவ்வேரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை துணை மாலையம்மன் சப்பரத்தில் ஏழுந்தருளி சுவாமியை அடைய வேண்டி திருச்சுழி ஆற்றில் தப கோலத்தில் காட்சி தருகிறார். இரவு 7 மணிக்கு திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் சென்று துணை மாலையம்மனுக்கு காட்சி தருவார். அப்போது 'உன்னை பங்குனி மாதத்தில் திருமணம் செய்து கொள்கிறேன் ' என்று உறுதியளித்து சுவாமி அம்மனை தன்னுடன் கோயிலுக்கு அழைத்து வருவார். இந்த நாள் தான் 'ஆடி தபசு' ஆக கொண்டாடப்படுகிறது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.