Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை. ராமசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பாளை. ராமசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பாளை. ராமசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

பாளை. ராமசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ADDED : செப் 03, 2011 02:43 AM


Google News
திருநெல்வேலி:பாளை. ராமசுவாமி கோயிலில் 52 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.பாளை. யின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ராமசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமபிரான் சீதாதேவி, லட்சுமணர் சகிதம் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் உள்ள தசாவதார பெருமாள் சிறப்பு மிகுந்தவர். இங்கு ராமபிரானை வழிபட்டால் அரிய வரங்கள் கிடைக்கும், உள்ளத்தில் உருவாகும் துயரங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் கடந்த இரு ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் செலவில் சுவாமி சன்னிதி விமானம், ராஜகோபுரம் சீரமைப்பு, மேல்தள ஓடு பதித்தல், தெப்பக்குளம் நீராழி மண்டபம் சீரமைப்பு, மதில்சுவர் கட்டுதல், தரைத்தளம் சீரமைப்பு, எலெக்ட்ரிக் வயர்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்தன.திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து 52 ஆண்டுகளுக்கு பின் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 31ம்தேதி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. விஸ்வசேனர், ராமபிரான், சீதாதேவி, தசாவதாரப்பெருமாளுக்கு தனித்தனியே யாகசாலை அமைத்து வைகானஸ ஆகம முறைப்படி இரு நாட்கள் கும்பாபிஷேக பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் உ.வே.ராஜூ என்ற லட்சுமணப்பட்டாச்சாரியார் தலைமையில் வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேக பூஜை, ஹோமங்கள் செய்தனர்.

மூன்றாம் நாளான நேற்று அதிகாலை நான்காம் கால பூஜை நடந்தது. பின்னர் புனிதநீர் புறப்பாடு நடந்தது. கோயில் ராஜகோபுரம், விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் 'நமோ நாராயணா' என உணர்ச்சிப்பெருக்கில் கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் புகழேந்திரன், மாநகராட்சி துணை மேயர் முத்துராமலிங்கம், கோயில் செயல் அலுவலர் சாமித்துரைப்பாண்டியன், உதவிசெயற்பொறியாளர் முருகேசன், ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை துவங்கி மதியம் வரை அன்னதானம், இரவு கருடசேவை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us