மோனோ ரயில் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
மோனோ ரயில் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
மோனோ ரயில் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
ADDED : செப் 07, 2011 11:53 PM
சென்னை: சென்னையில், மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில், கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. சென்னை பெருநகர் பகுதியில், வண்டலூர் - புழல், வண்டலூர் - வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி - வடபழனி ஆகிய, பகுதிகளுக்கிடையே மொத்தம், 111 கி.மீ., தொலைவுக்கு, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வடிவமைத்தல், கட்டுதல், முதலீடு, பராமரித்து ஒப்படைத்தல் அடிப்படையில், இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தை, தயாரிக்கும் பொறுப்பு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இத்திட்டத்திற்கான மதிப்பீடு இறுதி செய்யப்பட்டு, டெண்டர் கோரும் பணிகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் துவங்கியது. இதில், திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான ஒப்பந்தம், கடந்த 15ம் தேதியும், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தைத் தேர்வு செய்யும் ஒப்பந்தம் கடந்த 18ம் தேதியும் கோரப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்கள் வரும் 28ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து, கூடுதல் தகவல் பெற விரும்புவோரின், விளக்கங்களையும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகமான, பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் பூபதி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விளக்கம் அளித்தனர். இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ள நிறுவனங்கள், எவை எவை என்பது, வரும் 28ம் தேதி தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.