அக்டோபரில் "ஐ.சி.எப்.' ஆக மாறுகிறது "சைகா'
அக்டோபரில் "ஐ.சி.எப்.' ஆக மாறுகிறது "சைகா'
அக்டோபரில் "ஐ.சி.எப்.' ஆக மாறுகிறது "சைகா'
ADDED : செப் 27, 2011 06:21 PM

கோவை: பருத்தி வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகளை மில்களுக்கு துல்லியமாக அளித்து வந்த 'சைகா' அமைப்பு, வரும் அக்டோபரில் இருந்து ''இந்திய பருத்தி கூட்டமைப்பு' (இன்டியன் காட்டன் பெடரேஷன்) என பெயர் மாற்றப்படவுள்ளது.
தென்னிந்திய பருத்தி சங்கம் (சைகா), 32 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி மில்ஸ் நிறுவனரான ஜி.கே.சுந்தரத்தால் துவக்கப்பட்டது. இதன் தலைவராக சவுந்தரராஜன், கவுரவ செயலாளராக விஸ்வநாதனும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், சைகாவின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் கோவையில் நடந்தது.
விழாவில், தென்னிந்திய மில்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் துளசிதரன் பேசியதாவது: சர்வதேச அளவில் வர்த்தக விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள லிவிங்டன் காட்டன் அசோஷியேஷன், சர்வதேச காட்டன் அசோஷியேசனாக மாற்றம் பெற்றுள்ளது. இந்திய அளவில், பருத்தி வர்த்தகம், தொழில்நுட்பம் தொடர்பான கூட்டங்களில் பேசும்போது, தென்னிந்திய அளவில் மட்டுமே குறுகிய அளவில் உள்ள சங்கமாக 'சைகா' பேசப்படுகிறது. ஆனால், இந்திய பருத்தி உற்பத்தி, வர்த்தகம், தொழில் நுட்பத்தில் 'சைகா' சர்வதேச அளவில் முன்னணி அமைப்பாக உள்ளது.
எனவே, இந்திய அளவிலான அமைப்பாக மாற்றம் பெற, பெயர் மாற்றம் அவசியமாகிறது. இதையடுத்தே, 'இந்திய பருத்தி கூட்டமைப்பு' என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த பெயர் மாற்றத்தால், சர்வதேச அளவிலான பிரச்னைகளை இந்தியா சார்பில் உள்ள அமைப்பாக பேச முடியும். கோவையில் இந்திய அளவிலான ஒரு அமைப்பு இருப்பது, பெருமை அளிக்கும்விஷயமாகவும் இருக்கும். இவ்வாறு, தென்னிந்திய மில்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் துளசிதரன் பேசினார். விழாவில், சைகா கவுரவ செயலர் விஸ்வநாதன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், கவுரவ உதவி செயலர் ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.