Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பட்டுக்கூடு இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் :விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்டுக்கூடு இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் :விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்டுக்கூடு இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் :விவசாயிகள் எதிர்பார்ப்பு

பட்டுக்கூடு இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் :விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஆக 03, 2011 10:36 PM


Google News
உடுமலை : 'உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி, வெளிநாடுகளில் இருந்து பட்டுக்கூடு இறக்குமதி செய்வதற்கு, கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்' என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்தியாவில் ஆண்டுக்கு 30 ஆயிரம் மெட்ரிக்., டன் கச்சா பட்டு தேவை உள்ளது. உள்நாட்டு உற்பத்தி 19 ஆயிரம் டன்னாக இருப்பதால், 11 ஆயிரம் மெட்ரிக்., டன் பற்றாக்குறையை தவிர்க்க பல்வேறு நாடுகளிலிருந்து கச்சாபட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. 2001-02 ம் ஆண்டில் குறைந்த வரி விதிப்பில் சீனாவிலிருந்து 9,258 மெட்ரிக்., டன் கச்சா பட்டு இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், உள்நாட்டு பட்டுக்கூடுகளின் விலை கிலோ 90 ரூபாய்க்கும், கச்சாபட்டு கிலோ 800 ரூபாய்க்கும் விலை சரிந்தது. உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கைகளையடுத்து மத்திய அரசு 2003 ம் ஆண்டு ஆய்வு நடத்தி, சீனாவிலிருந்து கட்டுப்பாடு இல்லாமல் இந்தியாவிற்கு கச்சாபட்டு இறக்குமதி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுத்தது. இறக்குமதிக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டது. இந்த வரிவிதிப்பு 2008ம் ஆண்டு வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்ததால், உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் மற்றும் கச்சாபட்டிற்கு நல்ல விலை கிடைத்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் கோபி, உடுமலை, தர்மபுரி, சேலம் உட்பட பகுதிகளில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கரில் மல்பெரி செடிகள் பயிரிடப்பட்டன. குறிப்பாக உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும் 3 ஆயிரம் ஏக்கர் வரை மல்பெரி செடி பயிரிட்டு விவசாயிகள் நாள்தோறும் ஒரு டன் வரை பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்தனர். விலையும் கிலோ பட்டுக்கூடு 400 ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி, 3 ஆயிரம் மெட்ரிக்., டன் கச்சாப்பட்டை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்தது. இறக்குமதிக்கான வரியையும், 30 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்தது. மத்திய அரசின் அறிவிப்பையடுத்து உள்நாட்டில் பட்டுக்கூடுகளின் விலை சரிந்தது. கிலோவுக்கு 200 ரூபாய் வரை விலை குறைந்து கடந்த இரண்டு மாதங்களாக அதிகபட்சமாக 260 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. பட்டுக்கூடுகளின் விலை அதிகரிக்காததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில், பட்டுக்கூடுகளுக்கு நிரந்தர விலை கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், 'தமிழ்நாட்டில் பட்டுக்கூடுகளை பட்டு நூல் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற தேவையான தொழிற்சாலைகள் அதிகளவு இல்லை. இதனால், கூடுகளுக்கு ஆதார விலை கூட கிடைப்பதில்லை' என விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். விலை போதுமான அளவு உயராத நிலையில், மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே, 'மாநில அரசு பட்டுக்கூடுகளுக்கு ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். மத்திய அரசிடம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்கவலியுறுத்தி வேண்டும்' என, எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us