/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இந்தியாவில் 147 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்!முதன்மை விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்இந்தியாவில் 147 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்!முதன்மை விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 147 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்!முதன்மை விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 147 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்!முதன்மை விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 147 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல்!முதன்மை விஞ்ஞானி அதிர்ச்சித் தகவல்
ADDED : ஆக 14, 2011 10:50 PM
பெ.நா.பாளையம் : ''ஆக்கிரமிப்பு, காடுகளுக்கு தீ வைத்தல், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் 147 பறவையினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,'' என்று சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மைய முதன்மை விஞ்ஞானி பாலசுப்பிரமணியன் பேசினார்.
பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'பறவைகள் மற்றும் அதன் வாழிடங்கள்' என்ற தலைப்பில் செயல்திட்ட விளக்க கண்காட்சி துவக்க விழா நடந்தது. கண்காட்சியை, ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மைய முதன்மை விஞ்ஞானி பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது: உலகில் 10 ஆயிரம் வகையான பறவையினங்கள் உள்ளன. இந்தியாவில் ஆயிரத்து 250 பறவையினங்கள் உள்ளன. இதில், 500 தமிழகத்தில் உள்ளன. பறவைகள், அதன் வாழிடங்கள் மற்றும் உணவு முறைகளை வைத்து 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், குறிப்பிட்ட சில இடங்களை 920 பறவைகள் வசிப்பிடமாக கொண்டுள்ளன. இடம் விட்டு இடம் நகர்ந்து செல்லும் பறவைகளாக 330 பறவையினங்கள் உள்ளன. உலகில், சுற்றுச் சூழலை காப்பாற்றுவதில் பறவைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. மலர்களுக்கு இடையே மகரந்த சேர்க்கை நடக்க, விதைகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் பறவைகளின் பங்கு மகத்தானது. பறவைகள், ஒரு ஜோடி எலிகளை அழிப்பது 880 எலிகளை பெருக விடாமல் செய்வதற்கு சமம். ஆந்தைகள், இரவு நேரத்தில் எலியை வேட்டையாடுவதால் எலிகளால் ஏற்படும் பயிர் அழிவு தடுக்கப்படுகிறது. தென் இந்தியாவில் ஆந்தை, வீடுகளுக்கு அருகில் சத்தம் போட்டால், அதை கெட்ட சகுனமாக கருதுகிறார்கள். ஆனால், இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் வசிப்பவர்கள், ஆந்தையை வீடுகளில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்புகின்றனர். இதற்காக காடுகளில் உள்ள ஆந்தைகள் வேட்டையாடப்படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இது குற்றம் என்பதை, பொதுமக்களிடம் அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. சூழல் மாற்றங்களுக்கேற்ப சில பறவைகள் ஆண்டுதோறும் வடதுருவம், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 10 ஆயிரம் கி.மீ., தூரம், கடந்து வேறு இடங்களுக்கு பறந்து செல்கின்றன. சில பறவையினங்கள் பகல் அல்லது இரவு நேரத்தில் 6 லிருந்து 11 மணி வரை தொடர்ந்து பறக்கும் ஆற்றல் பெற்றது. அதிலும், 'ஸ்னிப்' என்ற பறவையினம் 4 ஆயிரத்து 800 கி.மீ.,தூரத்துக்கு தொடர்ந்து பறந்து செல்லும் திறன் படைத்தது. இவ்வாறு முதன்மை விஞ்ஞானி பாலசுப்பிரமணியன் பேசினார். கண்காட்சியில், பறவையினங்களுக்கான அச்சுறுத்தல், அதைத்தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், இந்தியாவில் உள்ள பறவையினங்கள், அவற்றின் பழக்க வழக்கம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் பிரசன்னா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். கண்காட்சி ஆக. 15 (இன்று) முடிவடைகிறது.