பா.ஜ., கடல் முற்றுகை: போலீசார் விசாரணை
பா.ஜ., கடல் முற்றுகை: போலீசார் விசாரணை
பா.ஜ., கடல் முற்றுகை: போலீசார் விசாரணை
ADDED : ஆக 09, 2011 12:13 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நடந்த, கடல் முற்றுகைப் போராட்டத்தில், பா.ஜ., மாநில நிர்வாகிகள் கடலுக்குள் செல்ல, பயன்படுத்தப்பட்ட படகு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக மீனவர்கள் மீது, தொடர் தாக்குதலை நடத்தி வரும் இலங்கை அரசையும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய மத்திய அரசையும் கண்டித்து, நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் கடல் முற்றுகைப் போராட்டம் நடந்தது. பா.ஜ., அகில பாரத செயலர் முரளீதர் ராவ் பகல் 12 மணிக்கு மேடைக்கு வந்த சிறிது நேரத்தில், கடற்கரையில் படகில் வந்திறங்கிய பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட கட்சி நிர்வாகிகளை, போலீசார் மேடைக்கு அழைத்து வந்தனர். மேடையில் ராதாகிருஷ்ணன், ''காலை 6 முதல் பகல் 12 மணி வரை கடலில் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்'' என்றார். போலீசார் முதலில் இதை மறுத்தாலும், பின்னர் விசாரித்ததில் உள்ளூர் நிர்வாகிகள் சிலரின் உதவியுடன், அதிகாலையில் பா.ஜ.,வினர் நாட்டுப்படகில் ஆழ்கடலுக்குச் சென்று திரும்பிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் பயணம் செய்த படகு எது, உரிமையாளர் யார் ஆகிய தகவல் கிடைக்காத நிலையில், இதுகுறித்து, நாட்டுப்படகு மீனவர்களிடையே போலீசார் விசாரித்து வருகின்றனர்.


