Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்ந்ததால் பாராட்டு மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிசு வழங்கல்

அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்ந்ததால் பாராட்டு மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிசு வழங்கல்

அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்ந்ததால் பாராட்டு மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிசு வழங்கல்

அரசு பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்ந்ததால் பாராட்டு மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிசு வழங்கல்

ADDED : ஜூலை 26, 2011 12:56 AM


Google News

திற்பரப்பு : திருநந்திக்கரை அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களை பொதுமக்கள் பாராட்டி, பரிசு வழங்கினர்.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து பள்ளிகள் மூடுவிழா கண்டு வருகிறது.

இதற்கு போதிய ஆசிரியர்களை பணியமர்த்தாததும், அடிப்படை வசதிகள் இல்லாததும் ஒரு காரணமாக இருந்தாலும், அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர்.அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை என்பது அரிதாகி வருகிறது. இந்நிலையில் திருநந்திக்கரை அரசு பள்ளியில் இவ்வாண்டு ஒன்றாம் வகுப்பில் புதிதாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.



இதற்கு அப்பகுதி பொதுமக்களின் ஒத்துழைப்பும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முயற்சியும் காரணம் என கூறப்படுகிறது. முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட பிரபலங்கள் படித்ததால் இப்பள்ளியை தரமான பள்ளியாக தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது.அறிவியல் இயக்கத்தினர் ஆண்டுதோறும் புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கியும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கியும் ஊக்குவித்து வருகின்றனர். இந்த ஆண்டு நடந்த பாராட்டு விழாவிற்கு அறிவியல் இயக்க பகுதிக்குழு தலைவர் திவாகரன் பிள்ளை தலைமை வகித்தார். மலர் உறுப்பினர் சசிகலா வரவேற்றார்.அறிவியல் ஆடவர் குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், திருநந்திக்கரை உயர்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஐயாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் கோமளன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வம்பரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய தலைவர் விஜயசந்திரன், பகுதிக்குழு செயலாளர் மனோ ரஞ்சன்தாஸ், முனைவர் நாராயணன் நாயர், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் ஜோசப் ஜெபனேசர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பிரபகுமார் உட்பட பலர் பேசினர்.அறிவியல் ஆடவர்குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நாயர் நன்றி கூறினார்.



நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களை மேடைக்கு அழைத்து மலர் மாலை அணிவித்து, பரிசு வழங்கி கவுரவித்தனர். தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் பள்ளியில் முதல் மார்க் எடுத்த மாணவி சரண்யாவிற்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் நினைவு பரிசும், இரண்டாம் இடம் பிடித்த மாணவி சஜிதகுமாரிக்கு நான்காயிரம் ரூபாய் மற்றும் நினைவு பரிசும், மூன்றாம் இடம் பிடித்த மாணவி ஹரிதாவுக்கு மூன்றாயிரம் ரூபாய் மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார், மலர் சுயஉதவி குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் அறிவியல் ஆடவர் குழுவினர் செய்திருந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us