இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு: எஸ். ராமசாமி
இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு: எஸ். ராமசாமி
இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு அதிகரிப்பு: எஸ். ராமசாமி

சென்னை: சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ஆகாஷ் மருத்துவமனை டாக்டர் காமராஜ் கூறியதாவது: அனைவரது உடலிலும் 'டெஸ்டோஸ்டிரான்' மற்றும் 'ஈஸ்ட்ரோஜன்' ஆகிய இரு ஹார்மோன்களும் இருக்கும். ஆண்களுக்கு, 'டெஸ்டோஸ்டிரான்' ஹார்மோன் அதிகமாக இருப்பதால், அதை ஆண் ஹார்மோன் என அழைக்கிறோம். பெண்களுக்கு, 'ஈஸ்ட்ரோஜன்' அதிகமாக இருப்பதால், அது பெண் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. ஆண்களுக்கு, ஆண் ஹார்மோன் குறைந்து, பெண் ஹார்மோன் அதிகரிப்பது ஆண்மை குறைவுக்கு ஒரு காரணம்.சமீபகாலமாக, சென்னை போன்ற நகர்ப்புறப் பகுதிகளில், ஆண்மை குறைவுக்காக சிகிச்சைக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், இளம் வயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், ஆண்மை குறைவுக்கு காரணம்.
இதுபோல், பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி, உணவு தானியங்களில் உள்ள ரசாயனத்தால், ஆண் ஹார்மோன் குறைந்து, பெண் ஹார்மோன் அதிகரிக்கும் என்பது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.முறையற்ற உணவு பழக்கத்தால் உடலில், அளவுக்கு அதிகமாக சேரும் கொழுப்பு சத்து, ஆண் ஹார்மோனை குறைத்து, பெண் ஹார்மோன் அதிகரிக்க வழி செய்கிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு, ஆண்மை குறைவோடு, மலட்டுதன்மையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலிலுள்ள, கெட்ட கொழுப்பே இதற்கு காரணம்.
ஆண்மைக் குறைவுக்கும், மாரடைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆண்மை குறைவுக்கு, ரத்தக் குழாய் பாதிப்பும் ஒரு காரணம் என்பதால், ஆண்மைக் குறைவு ஏற்பட்டால், அதை மாரடைப்புக்கு எச்சரிக்கை மணியாக கருதி, டாக்டரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், மாரடைப்பு வர வழி வகுக்கும். அதேபோல், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் பாதிப்பு இருந்தால், பக்கவாத நோய் வர வாய்ப்புள்ளது. எனவே, ஆண்மை குறைவு இருந்தால், சிகிச்சை பெறுவதற்கு தயக்கமும் அலட்சியமும் கூடாது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம், இந்த குறைகளை போக்க முடியும்.