தி.மலை தனியார் கல்லூரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
தி.மலை தனியார் கல்லூரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
தி.மலை தனியார் கல்லூரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 26, 2011 10:27 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, 'சண்முகா தொழிற்சாலைகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, இரண்டாவது முறையாக, நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், கல்லூரி நிர்வாகத்தினர் பீதியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள இந்த கல்லூரிக்கு, நேற்று அதிகாலை மூன்று மணிக்கு, கல்லூரி முதல்வர் உடையப்பன் கைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், 'உங்கள் கல்லூரியில், இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கப் போகிறது.
முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' எனக் கூறி, தொடர்பைத் துண்டித்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில், வெவ்வேறு எண்களில் இருந்து, இரு முறை, மீண்டும் கல்லூரி முதல்வரின் கைபேசிக்கு, அந்த நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். திருவண்ணாமலை டவுன் போலீசில், புகார் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று, நேற்று அதிகாலை, 4 மணி முதல் 7 மணி வரை, தீவிர சோதனை நடத்தினர். நேற்றும், வெடிபொருள் எதுவும் சிக்கவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில், இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து பேசுவதைப் போல் மர்ம நபர், மிரட்டல் விடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே கல்லூரிக்கு, அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம், கல்லூரி நிர்வாகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரிக்கு, கடந்த 22ம் தேதி, போனில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில், அது வெறும் வதந்தி என தெரிந்தது.