ADDED : செப் 18, 2011 10:16 PM
பொள்ளாச்சி : பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் மழை பொழிவால் பசுமை வனமாக
மாறியுள்ளதால், காட்டுயானைகள் 'ஜாலி வாக்' வந்து நீர்நிலைகளில் தண்ணீர்
குடித்து செல்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம்
958 சதுர கிலோமீட்டர் பரப்பிலும், பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் 285 சதுர
கிலோமீட்டர் பரப்பிலும் அமைந்துள்ளன. புலிகள் காப்பகத்தில்
பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட
அணைகளும், வனத்தினுள் நூற்றுக்கணக்கான தடுப்பணைகளும் அமைந்துள்ளன.
தென்மேற்கு மழையால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இரு
வனப்பகுதியிலும் சேர்த்து 900க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் இருப்பதாக
சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. காட்டு யானைகள் குட்டிகளுடன்
நீர்நிலைகளுக்கு 'ஜாலி வாக்' வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.
டாப்சிலிப்பில் இருந்து பரம்பிக்குளம் செல்லும் வழியில் தூணக்கடவு அணையில்
காட்டுயானைகள் கும்பலாக வந்து தண்ணீர் குடித்தன. தாய் யானை அங்கிருந்த
மரக்கிளைகளை உடைத்து குட்டி யானைகளுக்கு உணவாக கொடுத்தது. அதன்பின்,
காட்டுயானைகள் தும்பிக்கையை பிடித்து இழுத்து விளையாடின. பரம்பிக்குளம்
வனப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளின் விளையாட்டை கண்டு
ரசித்தனர்.