ராமதாசுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு
ராமதாசுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு
ராமதாசுக்கு எதிரான வழக்கு தீர்ப்பு தேதி தள்ளிவைப்பு
ADDED : செப் 17, 2011 12:55 AM

சென்னை: பா.ம.க., தலைவர் ராமதாஸ், அன்புமணிக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, அ.தி.மு.க., அமைச்சர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. அ.தி.மு.க., அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனு: கடந்த 2006 ம் ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அப்போது, பா.ம.க.,வைச் சேர்ந்தவர்கள், என்னை கொலை செய்ய முயற்சித்தனர். இதில், என் உறவினர் முருகானந்தம் கொல்லப்பட்டார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் அவரது உறவினர்கள் சீனிவாசன், பரசுராம், பிரீத்திபன், எனக்கு எதிராக போட்டியிட்ட கருணாநிதி ஆகியோருக்கு, என் மீது தனிப்பட்ட பகை உள்ளது. நான் அளித்த புகாரில், ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீது, குற்றம் சாட்டியிருந்தேன். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், விசாரணை கிடப்பில் போடப்பட்டது. இவ்வழக்கில், 2008 ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த ராமதாஸ், அன்புமணி
உள்ளிட்ட ஆறு பேர் நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். மேற்கொண்டு
விசாரணை நடத்த, திண்டிவனம் டி.எஸ்.பி.,க்கு மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. கோட்டக்குப்பம் சப்-டிவிஷன் டி.எஸ்.பி., நடத்தும் விசாரணையில், எந்தப் பலனும் இருக்காது. துவக்கத்தில் இருந்தே ராமதாஸ், மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்கும் நோக்கில் தான் விசாரணை செல்கிறது. எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, கடந்த பிப்ரவரி மாதம்
தாக்கல் செய்யப்பட்டது. திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, அப்போது சி.வி.சண்முகம் இருந்தார். இம்மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். சி.வி.சண்முகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.குமார், அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பிலும், வழக்கறிஞர் ஆஜரானார். வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், இம்மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி அரி பரந்தாமன் தள்ளிவைத்தார்.