Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/"வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'

"வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'

"வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'

"வீல்'சேரில் அண்ணனை 2 கி.மீ., தூரமுள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் "பாசமலர்கள்'

ADDED : ஜூலை 25, 2011 12:13 AM


Google News
Latest Tamil News

கீழக்கரை:பொருளாதாரம், பஸ் வசதி இல்லாத நிலையில் நடக்க முடியாத மகனை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோரை பணிய வைக்க , பட்டினி கிடந்து சாதித்தார் மாற்றுத்திறனாளி. சக்கரநாற்காலியில் இவரை 2 கி.மீ., தூரத்தில் உள்ள பள்ளிக்கு தள்ளிக் கொண்டு செல்லும் சகோதரர்களின் பாசம், பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்தவர் ஜெபஞான ஜெயராஜ். பனை மர ஓலைகள் வெட்டி கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர். கூலி தொழிலாளி. சாமுவேல்(13), இமானுவேல்(10), கபேரியல்(6) என மூன்று மகன்கள் உள்ளனர். உள்ளுரில் வேலைக்கு பஞ்சம் ஏற்பட்டது. கடந்தாண்டு பிழைப்பு தேடி ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் அருகேயுள்ள குருத்த மான்குண்டு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தனர். அங்கிருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கும் சாமுவேலை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்தனர். பள்ளிக்கு செல்வேன் என பட்டினி கிடந்து பெற்றோரை பணிய வைத்தான் சாமுவேல்.



மகனின் ஆர்வத்திற்கு தடையாக இருக்க விரும்பாத பெற்றோர், 2 கி,மீ., தூரத்தில் உள்ள பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்தனர். அதே பள்ளியில் இமானுவேல், கபேரியலையும் சேர்த்தனர். பள்ளி சென்று வர பரமக்குடி தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட 'வீல்சேர்'ல், பிளாஸ்டிக் நாற்காலியை பொருத்தினர். இப்போது இதில் தம்பிகள் உதவியுடன் சாமுவேல் பள்ளிக்கு சென்று வருகிறார்.



சாமுவேல் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெறுவதும், டாக்டர் ஆவதும், இலவச சேவை செய்வதே லட்சியம்,'' என்றார்.பள்ளி வகுப்பு ஆசிரியை முனீஸ்வரி கூறியதாவது:ஆறாம் வகுப்பு தேர்வில் முதல் ரேங்க் பெற்ற சாமுவேல் ஏழாம் வகுப்பிலும் சிறந்த மாணவராக விளங்குகிறார். சத்துணவு வாங்கி வருவதிலிருந்து கழிவறை அழைத்து செல்வது வரை அனைத்து உதவிகளையும் சக மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். எப்போதும் சிரித்த முகத்துடன் சாமுவேல் இருப்பது, இவர் மீது, பிற மாணவர்களுக்கு பெரும் பற்றுதலை ஏற்படுத்தி உள்ளது.தந்தை ஜெபஞான ஜெயராஜ் கூறியதாவது: குடிசையில் இரவு 10 மணி வரை சிம்னி விளக்கு வெளிச்சத்தில் குழந்தைகள் படித்து வருவதை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. வறுமையின் பிடியில் உள்ளோம். நோட்டுகள் கூட வாங்கித்தர பணமில்லாமல் சிரமப்படுகிறோம், என்றார். கல்வி உதவி வழங்க விரும்புவோர் 95854 71209ல் தொடர்பு கொள்ளலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us