Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் கிலி :தலைமை வனப்பாதுகாவலர் விசாரணை எதிரொலி

மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் கிலி :தலைமை வனப்பாதுகாவலர் விசாரணை எதிரொலி

மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் கிலி :தலைமை வனப்பாதுகாவலர் விசாரணை எதிரொலி

மயக்க ஊசிக்கு காட்டு யானை பலி; வனத்துறையினர் கிலி :தலைமை வனப்பாதுகாவலர் விசாரணை எதிரொலி

ADDED : ஜூலை 13, 2011 02:12 AM


Google News
கோவை : மயக்க ஊசி செலுத்தியதில் காட்டு யானை இறந்து போனது தொடர்பாக விசாரிக்க வந்த அதிகாரி, அவசர கதியில் அரைகுறையாக ஆய்வு நடத்தி விட்டு சென்னை திரும்பினார்.

கோவை வனக்கோட்டத்தில், மனித-யானை மோதலுக்குத் தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊர்களுக்குள் அடிக்கடி ஊடுருவும் காட்டு யானைகளைக் கண்காணித்து, அவற்றின் குணாதிசயங்களை அறியும் பொருட்டு, அவற்றுக்கு 'ரேடியோ காலரிங்' பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை வனச்சரகத்தில் இதனைப் பொருத்தும் முயற்சியின்போது, 20 வயது ஆண் யானை ஒன்று பலியானது. ஆண் யானையின் மரணம், வன உயிரின ஆர்வலர்களையும், சூழல்வாதிகளையும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதுடன், இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியது. இரவு நேரத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டதே மரணத்துக்குக் காரணமென குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபற்றி விசாரிப்பதற்காக, தமிழக வனத்துறையின் தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) இந்தர்சமேஜாவை விசாரணை அதிகாரியாக வனத்துறை நியமித்துள்ளது. நேற்று காலையில் அவர் கோவை வந்தார். ஆண் யானை பலியான இடத்துக்கு அவரை வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரது 'விசிட்' பற்றி யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. கோவை டி.எப்.ஓ.,திருநாவுக்கரசு, உலக வன உயிரின நிதியத்தின் அஜய் தேசாய், வனத்துறை டாக்டர்கள் கலைவாணன், மனோகரன், ரேஞ்சர் ராஜேஸ்வரன் மற்றும் வனத்துறையினர், உடன் சென்றனர். யானைக்கு ஊசி செலுத்தப்பட்ட இடம், அது இறந்து கிடந்த இடம் ஆகியவற்றை வனத்துறையினர் அவருக்கு நேரில் காண்பித்து, நடந்த சம்பவத்தை விளக்கினர். இறந்து போன யானைக்கு மயக்க ஊசிக்குப் பதிலாக, அதிகளவு தூக்கம் வரச் செய்யும் 'ஜைலசின்' என்ற மருந்தைச் செலுத்தியதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இரவு நேரத்தில் ஏன் இதைச் செய்தீர்கள் என்று இந்தர்சமேஜா கேள்வி எழுப்பினார். அதற்கு, இரவு நேரத்தில் மட்டுமே சமவெளிப்பகுதிக்கு யானைகள் வருவதால், இரவில் இந்த முயற்சியைச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். யானைக்கு தூக்க மருந்தைச் செலுத்திய பின், செங்கல் சூளை தொழிலாளி ஒருவர், சத்தம் போட்டதால் அந்த யானை ஓடி விட்டதாகவும் டாக்டர்கள் கூறினர். அந்த யானையைப் பின் தொடர்ந்து செல்லும்போது, இடையில் வந்த மேலும் இரண்டு ஆண் யானைகள் தங்களைத் துரத்தியதாகவும், அதனால் 12.20க்கு தூக்க மருந்து செலுத்திய யானையை 1.20 மணிக்குத்தான் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் அதற்குள் அந்த யானை இறந்து போயிருந்ததாகவும் டாக்டர் கலைவாணன் விளக்கினார். தூக்க மருந்து செலுத்தும்போது, பெரும்பாலான யானைகள் நின்று தூங்கும் நிலையில், இந்த யானை கீழே படுத்து உறங்க முயன்றிருப்பதாகவும், அப்போது நுரையீரலுக்குக்கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இரவு இறந்த யானையை, அதிகாலையில் பிரேத பரிசோதனை செய்து, புதைத்ததாகவும் அவர்கள் கூறினர். காட்டு யானையைப் பின் தொடர்ந்தபோது, சத்தம் போட்டதாக வனத்துறையினர் கூறிய செங்கல் சூளைத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த இந்தர்சமேஜா, அவர்களிடம் 'என்ன நடந்தது' என்று விசாரித்தார். யானை புதைக்கப்பட்ட இடத்தையும் நேரில் பார்த்து, பல்வேறு குறிப்புகளையும் அவர் எடுத்துக் கொண்டார். நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''காட்டு யானை இறந்த சம்பவம் பற்றி, அரசு உத்தரவின்படி ஆய்வு செய்ய வந்துள்ளேன். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ததுடன், இது தொடர்புடைய வனத்துறையினர் மற்றும் பொது மக்களிடம் விபரங்கள் சேகரித்துள்ளேன். விரைவில் இதுபற்றி அரசுக்கு அறிக்கை அனுப்புவேன்,'' என்றார். காட்டு யானை மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய கானுயிர் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் பலரும் விசாரணை அதிகாரியைச் சந்திக்க நேற்று முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட அவர், நேற்று மாலையில் விமானம் மூலமாக சென்னை திரும்பினார். காட்டு யானை உயிரிழந்ததன் எதிரொலியாக, 'ரேடியோ காலரிங்' பொருத்தும் நடவடிக்கை, வனத்துறை மேலிடத்தின் உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. களமிறங்காத கந்தசாமி! கோவை மண்டல வனப்பாதுகாவலராகவுள்ள கந்தசாமி, இங்கு பொறுப்பேற்று பல மாதங்களாகியும் இதுவரை எந்தப் பிரச்னைக்கும் எட்டிக் கூடப் பார்ப்பதே இல்லை. நீலகிரி வடக்கு, தெற்கு, கோவை மற்றும் கூடலூர் ஆகிய நான்கு வனக்கோட்டங்களிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட போதும் அவர் களப்பணிக்கு வருவதே இல்லை. தலைமை வனப்பாதுகாவலர் நேற்று விசாரணைக்கு வந்த போதும், அங்கே வராமல் 'ஆப்சென்ட்' ஆனார் கந்தசாமி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us