ADDED : ஜூலை 26, 2011 09:28 PM
கோவை : நண்பரை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவருக்கு,கோர்ட் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தது.
கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (45); ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் பாட்சா (42); ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். 2010, ஜூலை 27 அன்று, ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்த பாலசுப்பிரமணியிடம் மது குடிக்க பணம் கேட்டார் பாட்சா. பணம் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பாட்சா, மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பரை குத்தினார். இதில், படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து பாட்சாவை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் அகஸ்டஸ் ஆஜரானார். நீதிபதி ராமமூர்த்தி வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட பாட்சாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.