தாய், மனைவியை கொன்ற வழக்கில் குடிபோதை ஆசாமிக்கு இரட்டை ஆயுள்
தாய், மனைவியை கொன்ற வழக்கில் குடிபோதை ஆசாமிக்கு இரட்டை ஆயுள்
தாய், மனைவியை கொன்ற வழக்கில் குடிபோதை ஆசாமிக்கு இரட்டை ஆயுள்
ADDED : செப் 27, 2011 11:42 PM
திண்டிவனம்: குடி போதையில், தாய் மற்றும் மனைவியை கொன்றவருக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த குடிசைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் லட்சுமணன்,48. குடிப்பழக்கம் உள்ளவர். கடந்தாண்டு செப்., 21ம் தேதி, பால் கறப்பதற்கான விளக்கெண்ணெய் வாங்கி வரும்படி லட்சுமணனிடம், அவரது மனைவி ஜெயலட்சுமி பணம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில், லட்சுமணன் குடித்துவிட்டு, இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்தார். இதை மனைவி கண்டித்ததால், ஆத்திரமடைந்த லட்சுமணன், விறகுக் கட்டையால் தாக்கி, ஜெயலட்சுமியைக் கொலை செய்தார். இதைத் தட்டிக்கேட்ட தன் தாய் நாகம்மாளையும்,70, லட்சுமணன் தாக்கினார். இதில், நாகம்மாளும் இறந்து விட்டார். இது குறித்து, ஜெயலட்சுமியின் சித்தப்பா காமராஜ் கொடுத்த புகாரின்படி, வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, லட்சுமணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதை விசாரித்த (கூடுதல் பொறுப்பு) நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணனுக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும், நேற்று மாலை தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கணேஷ்காந்தி வாதாடினார். இதைத் தொடர்ந்து, லட்சுமணனை கடலூர் மத்திய சிறைக்கு, போலீசார் கொண்டு சென்றனர்.